10 அணிகள் பங்கேற்ற இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் இந்தத் தொடரில், லீக் சுற்றுப் போட்டிகள் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமையுடன் முடிந்தது. இந்த சுற்று முடிவில் பஞ்சாப் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆஃப்' சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் வியாழக்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப் கிங்ஸ், 2-வது இடம் பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதியது.
இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு உண்டு. தோல்வி காணும் அணி, வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மோதும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும்.
பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆர்.சி.பி கேப்டன் ரஜத் பட்டிதார் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். பிரியன்ஷ் ஆர்யா 7 ரன்கள் மட்டுமே எடுத்த யஷ் தயால் வீசிய பந்தில் க்ருணால் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து ஜோஷ் இங்லீஸ் பேட்டிங் செய்ய வந்தார்.
அதிரடியாக விளையாடிய பிரப்சிம்ரன் சிங், 10 பந்துகளில் 2 பவுண்டரி, 1 சிக்சர் உடன் 18 ரன்கள் அடித்த நிலையில், புவனேஷ் குமார் பந்தில் ஜிதேஷ் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ஸ்ரேயஸ் ஐயர் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஜோஷ் ஹேஸில்வுட் பந்தில் ஜிதேஷ் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதையடுத்து நேஹல் வதேத்ரா வந்து ஜோஷ் இங்லிஸ் உடன் ஜோடி சேர்ந்தார்.
ஆனால், ஜோஷ் இங்லீஸ் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், ஜோஷ் ஹேஸில்வுட் பந்தில் புவனேஷ் குமார் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, மார்கஸ் ஸ்டாய்னிஸ் பேட்டிங் செய்ய வந்தார்.
நேஹல் வதேரா 8 ரன்கள் மட்டுமே எடுத்து, யஷ் தயால் பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த சஷாங்க் சிங் 3 ரன்கள் மட்டுமே எடுத்து சூயஷ் ஷர்மா பந்தில் போல்ட் அவுட் ஆனார். அடுத்து வந்த முஷீர் கான் சூயஷ் ஷர்மா பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் டக் அவுட் ஆனார்.
அடுத்து வந்த அஜ்மதுல்லா ஒமர்ஜாய், ஸ்டாய்னிஸ் உடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடினர். ஸ்டாய்னிஸ் 17 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 26 ரன்கள் எடுத்த நிலையில், சூயஷ் ஷர்மா பந்தில் போல்ட் அவுட் ஆனார். அடுத்து வந்த ஹர்பிரீத் பிரார் 4 ரன்களில் ரொமாரியோ ஷெபர்ட் பந்தில் போல்ட் அவுட் ஆனார். அடுத்து கைல் ஜெமிசன் வந்தார்.
ஆனால், அஜ்மதுல்லா ஒமர்ஜாய் 12 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்சர் உடன் 18 எடுத்த நிலையில், ஜோஷ் ஹேஸில்வுட் பந்தில் ஜிதேஷ் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இதன் மூலம், பஞ்சாப் கிங்ஸ் அணி 14.1 ஓவர்களில் 101 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சூயஷ் ஷர்மா, ஜோஷ் ஹேஸில்வுட் தலை 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். யஷ் தயால் 2 விக்கெட்டுகளும் புவனேஷ் குமார், ரொமாரியோ ஷெபர்ட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதன் மூலம், 102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பில் சால்ட் மற்றும் விராட் கோலி களமிறங்கினர். இதில் விராட் கோலி 12 ரன்களில் ஜோஷ் இங்கிலிஸ் பந்துவீச்சில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மயங்க் அகர்வால் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸர் விளாசிய நிலையில், 19 ரன்களில் கேட்ச் ஆனார்.
மறுபுறம் நிலைத்து நின்று அதிரடி காட்டிய பிலிப் சால்ட், 23 பந்துகளில் அரைசதம் கடந்தார். இறுதியில் பெங்களூரு அணி 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
பிலிப் சால்ட்(56 ரன்கள்) மற்றும் ரஜத் படிதார்(15 ரன்கள்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் ஐ.பி.எல். 2025 இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக பெங்களூரு முன்னேறியுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2016-ம் ஆண்டு பெங்களூரு அணி ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.