People started calling me ‘Silver Sindhu’: PV Sindhu
நிலவில் முதலில் காலடி எடுத்து வைத்த நீல் ஆர்ம்ஸ்ஸ்ட்ராங்கை மட்டும் தான் இந்த இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும். அதற்கு அடுத்த நிலவில் இறங்கிய காலின்ஸ், ஆல்ட்ரின் ஆகியோரை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
Advertisment
அதைப் போலத்தான் இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்துவின் நிலைமையும்.
"இறுதிப் போட்டிக்கு சென்றுவிட்டால், தங்கத்தை வென்றே ஆக வேண்டும். நாட்டிற்காக என்ன வேண்டுமானாலும் நாம் செய்யலாம். நான் அனைத்திற்கும் தயாராக உள்ளேன். தங்கத்திற்காக நான் என் இதயத்தை கூட தர தயாராக உள்ளேன்" என்று 2017ம் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்பு பேசியவர் பிவி சிந்து.
அதற்கு முன்பு 2013 மற்றும் 2014-ல் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சிந்து வெண்கலப் பதக்கமே வென்றார். இதுமட்டுமின்றி, பல முக்கிய தொடர்களிலும், அரையிறுதி வரை வெற்றிப் பெறும் சிந்து, இறுதிப் போட்டியில் தங்கத்தை கைப்பற்ற எவ்வளவோ போராடியும் தோல்வியையே தழுவினார்.
2017ம் ஆண்டிலும் உலக சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியிலும் சிந்து தோல்வி அடைந்தார்.
ஆனால், அவரது விடா முயற்சியின் பலனாக, 2019ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் தொடரில், 2017 ஆம் ஆண்டு எந்த வீராங்கனையோடு தோற்றாரோ, அதே வீராங்கனையை வீழ்த்தி, தங்கத்தை உச்சி முகர்ந்தார் இந்த வீர மங்கை.
கொரோனா வைரஸ் காரணமாக லாக்டவுன் அமலில் இருக்கும் சூழலில், ஸ்ம்ரிதி மந்தனா, ரோட்ரிக்ஸ் ஆகிய வீராங்கனைகளோடு வீடியோ கால் மூலம் பேசிய சிந்து, ஒரு எழுச்சி தரும் நிகழ்வை பதிவு செய்துள்ளார்.
அதில், "2019 உலக சாம்பியன்ஷிப் தொடரில் நான் வென்றே தீர வேண்டும் என்று உறுதி கொண்டேன். ஏனெனில், அதற்கு முன்பு நான் இரு வெள்ளிப்பதக்கமும், இரு வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளேன். ஆனால், தங்கப்பதக்கம் வெல்லவில்லை. மக்கள் என்னை 'சில்வர் சிந்து' என்றே அழைக்கத் தொடங்கிவிட்டனர். ஆகையால், எனது 100 சதவிகித திறமையை வெளிப்படுத்தி வெற்றிப் பெற்று காட்ட வேண்டும் என்று விளையாடினேன். வென்றேன்" என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”