சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று ஐபிஎல் போட்டி நடக்க உள்ளது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் மோதுகின்றனர். தமிழகம் முழுவதும் காவிரி விவகாரம் தொடர்பாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னையில் ஐ.பி.எல் நடத்த எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பரபரப்பான சூழலால் சென்னை அணி வீரர்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் வெடித்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாக தற்போது சென்னையில் ஐ.பி.எல் போட்டி நடத்தக் கூடாது என்ற எதிர்ப்புகளும் எழுந்துள்ளது. இந்தக் கோரிக்கை மற்றும் வலியுறுத்தலை மீறி போட்டி நடத்தினால் மைதானத்தில் போராட்டம் நடைபெறும் என்று பல்வேறு கட்சியினர் தெரிவித்தனர். மேலும், சென்னையில் தங்கியுள்ள சென்னை அணியின் வீரர்களை சிறைபிடிப்போம் என்று ஆவேசமாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க சேப்பாக்கம் மைதானம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் வீரர்கள் தங்கியுள்ள ரேடிசன் புளூ ஹோட்டலிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று மைதானத்திற்கு விளையாட வரும் வீரர்கள் அனைவருக்கும் தீவிர கண்காணிப்புடன் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. ஹோட்டலில் இருந்து புறப்பட்டு மைதானத்திற்கு வரும் வரை ஒரு குழு பாதுகாப்பு அளித்து, பின்னர் மைதானம் அடைந்தவுடன் போட்டி முடியும் வரை மற்றொரு குழு பாதுகாப்பு அளிக்கும். குறிப்பாகப் போட்டியை காண வரும் ரசிகர்களுக்குக் கண்டிப்பான விதிமுறைகள் போடப்பட்டுள்ளது.
ரசிகர்கள் கட்டுப்பாட்டுடன் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் தங்களுடன் எந்தப் பொருட்களும் உள்ளே எடுத்துச் செல்லக்கூடாது. தண்ணீர் பாட்டில், கைப்பைகள், செல்போன், பைனாகுலர், கருப்பு நிறக் கைக்குட்டைகள், கருப்பு ஆடை, தெர்மாகோல் அட்டை, பாதகைகள் உட்பட எதையும் உள்ளே எடுத்த செல்லக் கூடாது என்று உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய தீவிர பாதுகாப்புடன் இன்று மாலை பாபரப்பாக போட்டிகள் நடைபெற உள்ளது.