உலகக்கோப்பை செஸ் போட்டி டை-பிரேக்கரில் மாக்னஸ் கார்ல்சென் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
Praggnanandhaa in CHENNAI Tamil News: 'பிடே' (FIDE) நடத்திய உலகக்கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவும், உலகின் 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனும் (நார்வே) மோதினர்.
Advertisment
இறுதிப்போட்டியின் முதலாவது சுற்று 35-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது. அதே போல் 2-வது சுற்று ஒன்றரை மணி நேரத்தில் 30-வது காய் நகர்த்தலுக்கு பிறகு டிரா செய்யப்பட்டது. தொடர்ந்து நடந்த டை-பிரேக்கரில் மாக்னஸ் கார்ல்சென் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். 2ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தா வெள்ளி பதக்கம் வென்றார். எனினும், இது செஸ் உலகில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று பாராட்டப்படுகிறது.
இந்த நிலையில், போட்டிகளை முடித்துக்கொண்ட பிரக்ஞானந்தா இன்று தாயகம் திரும்பினார். இன்று சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் விளையாட்டு துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.
மயிலாட்டம், ஒயிலாட்டம், போன்ற கிராம கலைநிகழ்ச்சிகள் மூலம் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேளதாளம் முழங்க பிரக்ஞானந்தாவை ஊர்வலமாக அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வீரர்களும் தனியார் பள்ளி மாணவர்களும் வருகை தந்துனர்.
இந்த உற்சாக வரவேற்புக்கு மத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'உலகக் கோப்பை செஸ் போட்டியில் 2ம் இடம் பிடித்தது மகிழ்ச்சியை அளிப்பதாக' கூறினார். தொடர்ந்து பிரக்ஞானந்தா தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். தமிழக அரசின் சார்பில் ரூ. 30 லட்சம் காசோலையை பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“