/indian-express-tamil/media/media_files/SI5hvLvXXNbUeGBnswKx.jpg)
முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார், ஐ.பி.எல் தொடக்க சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது முதல் தேர்வாக இருக்கவில்லை என்று கூறியுள்ளார்.
IPL Cricket: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் பிரவீன் குமார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த இவர் கடந்த 2007ம் ஆண்டில் இந்திய அணிக்காக அறிமுகமானார். இவர் 6 டெஸ்ட், 68 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி 112 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
2008ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் களமாடிய அவர் 2010 வரை அந்த அணிக்காக விளையாடினார். அதன்பிறகு, 2011 முதல் 2013 வரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் விளையாடினார். 2014 ஐபிஎல் ஏலத்தில் அதிக அடிப்படை விலையின் காரணமாக அவர் விற்கப்படவில்லை. இதன்பிறகு, காயமடைந்த ஜாகீர் கானுக்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அவரை ஒப்பந்தம் செய்தது.
ஐ.பி.எல் 2015 ஏலத்தில் 2.20 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் எடுக்கப்பட்டார். பின்னர் அவர் 2016 முதல் 2017 வரை குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடினார். இதுவே அவர் ஐபிஎல்லில் கடைசியாக இடம்பெற்ற அணியாகும். தற்போது 37வயதாகும் பிரவீன் குமார் 2018ல் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார், ஐ.பி.எல் தொடக்க சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது முதல் தேர்வாக இருக்கவில்லை என்றும், அந்த அணியில் சேரத் தயக்கம் காட்டியதற்கு லலித் மோடி கடுமையான எதிர்வினை ஆற்றினார் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரவீன் குமார் தனது சமீபத்திய பேட்டியில், அவரது சொந்த ஊர் மீரட்டுக்கு அருகில் இருப்பதால் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் தான் சேர விரும்பியுள்ளார். ஆனால் அவர் ஆர்.சி.பி அதிகாரி ஒருவர் கொடுத்த பேப்பரில் கையெழுத்திட்டுள்ளார். அதுவே அந்த அணிக்கான ஒப்பந்தமாக மாறியுள்ளது. பிரவீன் தனது விருப்பத்தை கூற லலித்தை அணுகியபோது, அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கட்டி விடுவதாக மிரட்டியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
பிரவீன் தனது பேட்டியில் "நான் ஆர்.சி.பி அணிக்காக விளையாட விரும்பவில்லை, ஏனென்றால் பெங்களூர் எனது ஊரில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறது. எனக்கு ஆங்கிலம் தெரியாது, மற்றும் அங்குள்ள உணவு எனக்கு பிடிக்கவில்லை. டெல்லி மீரட்டுக்கு மிக அருகில் உள்ளது. இது என்னை பயணிக்க அனுமதிக்கும். எப்போதாவது ஒருமுறை என் வீட்டுக்கு சென்று வரலாம். ஆனாலும் ஒருவர் என்னை ஒரு பேப்பரில் கையெழுத்து போடச் சொன்னார். அது ஒப்பந்தம் என்று தெரியவில்லை. நான் பெங்களூர் அல்ல டெல்லிக்காக விளையாட விரும்புகிறேன் என்று சொன்னேன். லலித் மோடி என்னை அழைத்து எனது கேரியரை முடித்துக் கட்டிவிடுவதாக மிரட்டினார்" என்று கூறினார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.