புரோ கபடி லீக்: புரோ கபடி லீக் தொடரின் 6-வது சீசன், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை அக்.7 தொடங்குகிறது.
மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில், 'ஏ' பிரிவில் புனேரி பால்டன், அரியானா ஸ்டீலர்ஸ், மும்பை, தபாங் டெல்லி, குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
'பி' பிரிவில் தமிழ் தலைவாஸ், உ.பி.யோத்தா, நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ், தெலுகு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த போட்டி தொடரின் லீக் ஆட்டங்கள் சென்னை, சோனிபட், புனே, பாட்னா, நொய்டா, மும்பை, ஆமதாபாத், டெல்லி, ஐதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா ஆகிய நகரங்களில் அடுத்தடுத்து அரங்கேறுகிறது.
பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் கொச்சியிலும், இறுதிப்போட்டி மும்பையில் ஜனவரி 5-ந் தேதியும் நடைபெறுகிறது.
இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 3 முறை மோத வேண்டும். அடுத்து எதிர்பிரிவில் உள்ள அணிகளை ஒரு முறை சந்திக்க வேண்டும்.
மேலும் எதிர்பிரிவில் உள்ள ஒரு அணியுடன் மட்டும் வைல்டு கார்டு சுற்றில் விளையாட வேண்டும். இதன்படி ஒவ்வொரு அணியும் மொத்தம் 22 லீக் ஆட்டத்தில் விளையாடும்.
லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.
தொடக்க சுற்று லீக் ஆட்டங்கள் சென்னையில் நாளை முதல் 11ம் தேதி வரை நடக்கிறது.
தமிழ் தலைவாஸ்
சென்னையில் நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரவு 9 மணிக்கு தொடங்கும் 2-வது லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன் - மும்பை அணியும் மோதுகின்றன.
முதன்முதலாக 2017ம் ஆண்டு தான் தமிழ் தலைவாஸ் அணி இந்த கபடி தொடரில் களமிறங்கியது. ஆனால், 'பி' பிரிவில் கடைசி இடத்தையே அந்த அணி பிடித்தது.
இந்நிலையில், இந்த சீசனில் அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணியில், மன்ஜீத் சிலார், ஜஸ்விர்சிங், சுகேஷ் ஹெக்டே போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர்.
எனவே, இம்முறை தமிழ் தலைவாஸ் அணி நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.