Tokyo Olympic Sports Update : ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
உலகம் முழுவதும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 23-ந் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில தொடங்கியது. அன்று முதல் நாளுக்கு நாள் விறுவிறுப்பு அதிகரிக்கும் இந்த போட்டியில், இந்தியா சார்பில் தற்போது ஒரு வெள்ளிப்பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையல் இந்த ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் களமிறங்கியுள்ள உலக சாம்பியன் வீராங்கனை இந்தியாவின் பி.வி.சிந்து நிச்சயம் பதக்கம் வென்று திரும்பும்புவார் என்று பரவலாக எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது பி.வி.சிந்து பேட்மிண்டன் பிரிவில் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். இந்த ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், உலக தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ள டென்மார்க் வீராங்கனை மியா பீளிக்பெல்டை சந்தித்த பி.வி.சிந்து 21-15, 21-13 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றில் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை அகனே யமகுச்சியை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பி.வி.சிந்து, 21-13, 22-20 என்ற நேர் செட் கணக்கில் யமகுச்சியை வீழ்த்தி ஒலிம்பிக் பேட்மிண்டன் ஒற்றையர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து வரும் சனிக்கிழமை (நாளை) நடைபெறும் அரையிறுதி சுற்றில் பி.வி.சிந்து சீனாவின் சென்யூபையுடன் மோதுகிறார். தற்போது இந்த போட்டியில் வெற்றி பெற்று சிந்து பதக்கத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதே இந்தியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஏற்கனவே ரியோ ஒலிம்பிக் போட்டியில் பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil