சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள போட்டிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் அண்ணா சாலையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது. ஒட்டுமொத்த அண்ணா சாலையே முடங்கியுள்ளது. 4000 போலீசார்களின் பாதுகாப்பு, துணை கமாண்டோக்களின் பாதுகாப்புடன் இன்று இரவு போட்டி நடைபெற உள்ளது.
இந்த நிலையில், இன்று பேட்டியளித்த ஐபிஎல் சேர்மேன் ராஜீவ் சுக்லா, "விவசாயிகள் பிரச்சனைக்காக ஐபிஎல் போட்டிகளை இலக்காக வைப்பது ஏன்? காவிரியையும், ஐபிஎல்-லையும் தொடர்புப்படுத்தாதீர்கள். இதை அரசியல் ஆக்காதீர்கள். அரசியலுக்கு அப்பாற்பட்டு கிரிக்கெட் இருக்க வேண்டும். திட்டமிட்டப்படி, சென்னையில் அனைத்து ஐபிஎல் போட்டிகளும் நிச்சயம் நடக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நேற்று பேட்டி அளித்த போதும், சென்னையில் இருந்து போட்டிகளை மாற்றும் எண்ணமே இல்லை. நிச்சயம் ஐபில் போட்டிகள் சென்னையில் நடக்கும் என்று ராஜீவ் சுக்லா தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.