Ranji Trophy HIGHLIGHTS, Day 4: Tamil Nadu vs Saurashtra, Ranji Trophy, Elite, Group B Match
Tamil Nadu beat Ravindra Jadeja led Saurashtra by 59 runs Tamil News: 88-வது ரஞ்சி கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வரும் இந்தத் தொடரில் கடைசி குரூப் போட்டிகள் கடந்த 24 ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், எலைட் குரூப் பி-யில் இடம்பிடித்துள்ள தமிழ்நாடு – சவுராஷ்டிரா அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
Advertisment
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதல் இன்னிங்சில் 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 324 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 66 ரன்களும், அரைசதம் விளாசிய விஜய் சங்கர், ஷாருக் கான் 53 மற்றும் 50 ரன்களும் எடுத்தனர். தொடக்க வீரர் சாய் சுதர்சன் 45 ரன்களும், பாபா இந்திரஜித் 45 ரன்களும் எடுத்தனர்.
சவுராஷ்டிரா அணி தரப்பில் யுவராஜ்சிங் தோடியா 4 விக்கெட்டுகளையும், தர்மேந்திரசிங் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், சிராக் ஜானி 2 விக்கெட்டுகளையும், கேப்டன் ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். தொடர்ந்து முதல் இன்னிங்சில் ஆடிய சவுராஷ்டிரா அணி 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்து. அந்த அணியில் அதிகபட்சமாக சிராக் ஜானி 49 ரன்கள் எடுத்தார். அபாரமாக பந்து வீசிய தமிழ்நாடு அணியில் எஸ் அஜித் ராம் மற்றும் மணிமாறன் சித்தார்த் தலா 3 விக்கெட்டுகளையும், சந்தீப் வாரியர் விக்கெட்டுகளையும், அபராஜித், மற்றும் கேப்டன் பிரதோஷ் பால் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதன்பிறகு 2வது இன்னிங்சில் களமாடிய தமிழ்நாடு அணி 133 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் சாய் சுதர்சன் 37 ரன்கள் எடுத்தார். சுழலில் மிரட்டி எடுத்த கேப்டன் ஜடேஜா 7 விக்கெட்டுகளையும், தர்மேந்திரசிங் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். தொடர்ந்து 266 ரன்கள் கொண்ட இலக்கை துரத்த 2வது இன்னிங்சில் களமிறங்கிய சவுராஷ்டிரா அணி நேற்று 3வது நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 4 ரன்கள் எடுத்தது. அந்த அணியை விட தமிழ்நாடு அணி 262 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
Advertisment
Advertisements
இந்த நிலையில், இன்று 4 ஆம் நாள் ஆட்டத்தில் நேரத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த சவுராஷ்டிரா அணி 206 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் தொடக்க வீரர் ஹர்விக் தேசாய் சதம் விளாசி 101 ரன்கள் எடுத்த நிலையில், அவரின் சதம் வீணானது. மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய தமிழ்நாடு அணியில் எஸ் அஜித் ராம் 6 விக்கெட்டுகளையும், மணிமாறன் சித்தார்த் 3 விக்கெட்டுகளையும், சந்தீப் வாரியர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இறுதியில் தமிழ்நாடு அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றனர்.
இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு அணி அபார வெற்றியை பெற்றாலும், ரஞ்சி கிரிக்கெட்டின் லீக் சுற்று முடிவில் 21 புள்ளிகள் மட்டுமே பெற்று அணி 5வது இடத்தில் உள்ளது. இதனால் காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தவற விட்டுள்ளது. ஆந்திராவிடம் தோல்வியடையாமல் இருந்திருந்தால், தமிழ்நாடு அணி காலிறுதிக்கு முன்னேறியிருக்கும். கையில் இருந்த வாய்ப்பை அவர்கள் தவற விட்டனர். மறுபுறம், 26 புள்ளிகளுடன் பி- குரூப்பில் 2வது இடத்தில் உள்ள சவுராஷ்டிரா காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்தப் போட்டிகள் வருகிற 31 ஆம் தேதி முதல் தொடங்கி நடக்கிறது.