இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. புதன்கிழமை அன்று மைதானம் இருக்கும் பகுதியில் மழை வெளுத்து வாங்கிய நிலையில், முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து, மறுநாள் நேற்று வியாழக்கிழமை 2-ம் நாளில் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதல் இன்னிங்சில் பேட்டிங் ஆடியது. ஆனால், பவுலிங் வீசிய நியூசிலாந்து இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. இந்தியாவின் ஆடும் லெவன் வீரர்களில் 5 பேர் டக் அவுட் ஆகி வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 20 ரன்கள் மட்டுமே எடுத்தார். இறுதியில், முதல் இன்னிங்சில் முடிவில் இந்திய அணி 31.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் 46 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனைத் தொடர்ந்து, நியூசிலாந்து அதன் முதல் இன்னிங்சில் ஆடியது. 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்து, இந்திய அணியை விட 134 ரன்கள் முன்னிலை வகித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் கான்வே 91 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ரச்சின் ரவீந்திரா 22 ரன்களுடனும், டரில் மிட்செல் 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை 3-வது நாள் ஆட்டம் தொடங்கி நடந்து வருகிறது. நியூசிலாந்து அணிக்காக களத்தில் ஆடிய ரச்சின் ரவீந்திரா சதம் விளாசி மிரட்டினார். அவர் 157 பந்துகளில் 13 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 134 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அரைசதம் அடித்த டிம் சவுதி 64 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 91.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 402 ரன்கள் எடுத்தது.
தற்போது இந்திய அணி அதன் 2வது இன்னிங்சில் ஆடி வருகிறது. இந்திய அணி தரப்பில் தொடக்க வீரராக களமாடிய கேப்டன் ரோகித் அரைசதம் அடித்து 52 ரன்களுக்கு அவுட் ஆனார். அவருடன் ஜோடி அமைத்த தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 35 ரன்னில் அவுட் ஆனார். களத்தில் தற்போது விராட் கோலி - சர்பராஸ் கான் ஜோடி ஆடி வருகிறார்கள். இந்திய அணி 32 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்துள்ளது.
ரவி சாஸ்திரி கலாய்
இந்த நிலையில், நேற்றைய ஆட்டத்தின் போது இந்திய அணி வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து தடுமாறினர். இதனால், இந்தியா 46 ரன்னுக்கு சுருண்டது. இதனையடுத்து, முதல் இன்னிங்சில் நியூசிலாந்து பேட்டிங் ஆடிக் கொண்டிருந்த போது, பீல்டிங் நின்ற இந்திய அணி வீரர்களை இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஜாலியாக கலாய்த்துள்ளார்.
ஸ்லிப் திசையில் கோலி, சர்பராஸ் மற்றும் ராகுல் ஆகியோர் பீல்டிங் செய்து கொண்டிருந்த நிலையில், அவர்கள் பக்கம் கேமரா திரும்பியது. அப்போது, ஆங்கிலத்தில் வர்ணனை செய்து கொண்டிருந்த ரவி சாஸ்திரி, "குறைந்த ஸ்கோருக்கு அணி 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தது என்பது இந்தியாவில் கேள்விப்படாதது. அங்கு ஸ்லிப்பில் நின்று கொண்டிருக்கும் 3 வீரர்களும் டக்-அவுட் ஆகி வெளியேறியவர்கள்" என்று கூறி கலாய்த்தார். இது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“