கேப்டன் ரோகித் உடன் தொடக்க வீரராக இஷான் கிஷான் களமிறங்க வேண்டும் என்றும், இதுவரை ஒருநாள் போட்டியில் விளையாடாத 20 வயதான திலக் வர்மாவுக்கு 4வது இடத்தை வழங்குமாறும் ரவி சாஸ்திரி வலியுறுத்தியுள்ளார்.
13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடருக்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணிக்கு தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா சுப்மன் கில் இருப்பார்கள் என்று பரவலாகக் கருதப்படுகிறது.
Advertisment
கே.எல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் உடற்தகுதியை எட்டும் பட்சத்தில், அவர்கள் இருவரும் இடம் பெறுவார்கள். இருப்பினும், இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி புதிய பேட்டிங் வரிசையை தேர்வு செய்துள்ளார். அதில், கேப்டன் ரோகித் உடன் தொடக்க வீரராக இஷான் கிஷான் களமிறங்க வேண்டும் என்றும், இதுவரை ஒருநாள் போட்டியில் விளையாடாத 20 வயதான திலக் வர்மாவுக்கு 4வது இடத்தை வழங்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அணியில் 3வது இடது கை வீரராக ரவீந்திர ஜடேஜாவும், யஷஸ்வி ஜெஸ்வாலையும் கொண்டு வரும் யோசனையையும் முன்வைத்துள்ளார். அதோடு ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் கண்டிப்பாக ஆடும் லெவனில் இருக்க வேண்டும் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
Advertisment
Advertisements
இது தொடர்பாக அவர் பேசுகையில், "உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் பேட்டிங்கில் டாப்-7 வரிசையில் 3 இடக்கை ஆட்டக்காரர்கள் இடம் பெற வேண்டியது அவசியம் என்று நான் நினைக்கிறேன். இடக்கை பேட்ஸ்மேன்கள் எப்போதும் அணிக்கு சரியான கலவையை வழங்கக்கூடியவர்கள்.ஒரு இடத்திற்கு ரவீந்திர ஜடேஜா இருக்கிறார். மற்ற இரு இடக்கை ஆட்டக்காரர்களை அடையாளம் காண்பது தேர்வாளர்களின் பணி.
அண்மை காலத்தில் யார்-யார் சிறப்பாக விளையாடுகிறார்கள் என்பதை தேர்வு குழுவினர் கவனித்து இருப்பார்கள். இளம் இடக்கை பேட்ஸ்மேன் திலக் வர்மா வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அருமையாக விளையாடினார். அவர் பேட்டிங் செய்த விதம் என்னை வெகுவாக கவர்ந்தது. இதேபோல் ஜெய்ஸ்வாலும் சிறப்பாக ஆடுகிறார். அவர்களை ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை போட்டிக்கான அணியில் இணைக்க வேண்டும். இஷான் கிஷன் கடந்த 6-8 மாதங்களாக தொடர்ந்து அணியில் இருக்கிறார். விக்கெட் கீப்பிங் பணியையும் கவனிக்கிறார். அவரையும் அணிக்கு தேர்வு செய்தால் நன்றாக இருக்கும்.
இந்தியாவின் பேட்டிங் வரிசை நெகிழ்வு தன்மையுடன் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் விராட் கோலியை பேட்டிங்கில் 4-வது வரிசையில் பயன்படுத்தலாம். 4-வது வரிசையில் கோலியின் சாதனை மகத்தானது. லோகேஷ் ராகுல் காலில் அடைந்த காயத்தில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறார். கிட்டத்தட்ட 4 மாதங்கள் அவர் கிரிக்கெட் விளையாடவில்லை. அவர் ஆசிய கோப்பை போட்டிக்கான லெவனில் இடம் பிடிப்பது நிச்சயம் கடினம் தான்.
காயத்தில் இருந்து குணமடைந்து வந்தாலும் உடனே அவரது பேட்டிங் திறனை பழைய நிலைக்கு கொண்டு வருவது முடியாத காரியம். காயமடைந்த வீரர்களை அவசரகதியில் அணிக்குள் இழுக்க கூடாது. காயத்தில் சிக்கிய ஜஸ்பிரித் பும்ரா ஒன்றல்ல, இரண்டல்ல 3 முறை திரும்ப அழைக்கப்பட்டார். விளைவு காயத்தன்மை பெரிதாகி ஏறக்குறைய ஒரு ஆண்டு விளையாட முடியாமல் போனது." என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil