இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வருகை தந்த ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில், முதலில் நடந்த டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: WATCH: Jofra Archer caught napping mid-match in dugout in Ahmedabad, Ravi Shastri takes a dig at England’s trip
இதையடுத்து, இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற்றது. இந்த தொடருக்கான முதல் மற்றும் 2-வது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம், 2-0 என்ற கணக்கில் தொடரையும் இந்தியா கைப்பற்றி இருந்தது.
இந்த நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் போடுவதாக அறிவித்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 356 ரன்கள் குவித்தது.
இந்திய அணி தரப்பில் சதம் விளாசி அதிரடி காட்டிய சுப்மன் கில் 112 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் 4 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து, 357 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இங்கிலாந்து 214 ரன்னில் சுருண்டது. பவுலிங்கில் மிரட்டி எடுத்த இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டையும், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
50 ஓவர்கள் முழுவதுமாக பேட்டிங் ஆடாத இங்கிலாந்தை இந்தியா 142 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட தொடரை முழுவதும் கைப்பற்றி, இங்கிலாந்தை ஒயிட் வாஷ் செய்தது இந்தியா. அபாரமாக செயல்பட்ட சுப்மன் கில் இப்போட்டி மற்றும் தொடரின் நாயகனாக தெரிவானார்.
தூக்கம்
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது டக் அவுட்டில் தூங்கிக் கொண்டிருந்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரை வெளுத்து வாங்கியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.
இந்தப் போட்டிக்கான வர்ணனையில் இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சனுடன் அமர்ந்து இருந்த ரவி சாஸ்திரி, கட்டாக் மற்றும் அகமதாபாத்தில் பயிற்சி அமர்வுகளில் கலந்து கொள்ளாததற்காக இங்கிலாந்து அணியினரை கடுமையாக சாடினார். “நான் கேள்விப்பட்டதில் இருந்து, இங்கிலாந்து இந்த முழு சுற்றுப் பயணத்தில் ஒரே ஒரு வலைப் பயிற்சியில் தான் ஈடுபட்டு இருக்கிறார்கள். கடினமான வேலைகளைச் செய்ய நீங்கள் தயாராக இல்லை என்றால், நீங்கள் முன்னேறப் போவதில்லை, ”என்று சாஸ்திரி கூறினார்.
தொடர்ந்து பேசிய பீட்டர்சன், மூன்றாவது ஒருநாள் போட்டியில் காயமடைந்த ஜேக்கப் பெத்தேலுக்கு பதில் அணியில் இணைந்துள்ள டாம் பான்டன் இப்போட்டிக்கு முன்னதாக வலைப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு பதிலாக கோல்ஃப் பயிற்சியில் ஈடுபட்டதாக கூறினார். “துபாயிலிருந்து விமானம் மூலம் இங்கு வர 2 மணி நேரம் பிடிக்கும். அதனால், டாம் பான்டன் நேற்று கோல்ஃப் மைதானத்தில் இருந்துள்ளார். அவர் பேட்டிங் செய்யவில்லை. பிரச்சனை எங்கிருந்து வந்தது என்று இப்போது உங்களுக்கு தெரிகிறதா? 60 ரன்னுக்கு முதல் விக்கெட், 80 ரன்னுக்கு 2வது விக்கெட் என இப்படித்தான் நடக்கும். அவர்களில் யாரும் ஸ்பின் விளையாட மாட்டார்கள். அப்பறம் எப்படி நீங்கள் சுழற்பந்து வீச்சை மேம்படுத்துவது? ”என்று பீட்டர்சன் கூறினார்.
விளாசல்
அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, சிக்சருக்கு பந்து பறந்த நிலையில், கேமராவும் பந்தை தொடர்ந்து சென்றது. அப்போது, டக்அவுட்டில் ஆர்ச்சர் தூங்கிக் கொண்டிருக்க, அதனைப் பார்த்த ரவி சாஸ்திரி, “சரியாக நான் கேட்ட கேள்வி இதுதான். தூங்குவதற்கு நல்ல நேரம். இது இங்கிலாந்துக்கு ஒரு வகையான சிறந்த பயணம்,” என்று அவர் குறிப்பிட்டார்.