இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்ற நிலையில், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Ravichandran Ashwin announces retirement from international cricket after Gabba Test
இப்போட்டியின் போது மழை குறுக்கிட்டதால், ஆட்டம் டிராவில் முடிந்தது. இதனால், தற்போதைய நிலவரப்படி 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடர் சமநிலையில் உள்ளது. இந்நிலையில், அஸ்வின் தனது ஓய்வு குறித்த முடிவை அறிவித்துள்ளார்.
இந்திய அளவில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமை அஸ்வின் வசம் உள்ளது. 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தியுள்ளார். 38 வயதான அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 37 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிகபட்சபாக 67 முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றி முத்தையா முரளிதரன் முதலிடத்தில் உள்ளார்.
மேலும், 2011 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா கைப்பற்றியதில், அஸ்வினின் பங்கு இன்றியமையாதது. கடந்த 2010-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டுக்குள் நுழைந்த அஸ்வின், அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் 765 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சுழற்பந்து வீச்சில் இந்தியாவை அடுத்தகட்டத்திற்கு அழைத்துச் சென்றவர் அஸ்வின். குறிப்பாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா ஆதிக்கம் செலுத்த அஸ்வினின் சுழற்பந்து வீச்சு உதவிகரமாக இருந்தது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். தற்போது வரை 41 போட்டிகளில் விளையாடிய அஸ்வின், இதில் 195 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
எனினும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அஸ்வின் விளையாடவுள்ளார். சமீபத்தில் இது தொடர்பாக நடந்த ஏலத்தில், அஸ்வினை ரூ. 9.75 கோடிக்கு சென்னை அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“