/indian-express-tamil/media/media_files/4AKFbT4P8J8zB8AXVopS.jpg)
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவேன் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை; ரவிச்சந்திரன் அஸ்வின்
இது தான் இந்தியாவுக்காக எனது கடைசி உலகக்கோப்பை என்று சொல்லிக் கொண்டே இருந்தேன். அதனால் இதனை கொண்டாட்டமாக விளையாட வேண்டும் என்று இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 5 நாட்களே உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்று தங்களின் திறனை மேம்படுத்தி வருகின்றன. அந்தவகையில் இந்திய அணியும் பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. இந்திய அணி இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுடன் பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது.
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கடைசி நேரத்தில் இடம் பிடித்த தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வினும் தீவிர பயிற்சி எடுத்து வருகிறார். கவுகாத்தியில் நடைபெற்ற வலைபயிற்சியில், பந்துவீச்சு பயிற்சியுடன் பேட்டிங் பயிற்சியிலும் அஸ்வின் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அப்போது அஸ்வின் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களை ஆட முயன்றது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நேர்காணல் எடுத்துள்ளார். அந்த நேர்காணலில் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுகையில், உண்மையை சொல்ல வேண்டுமானால், உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவேன் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. எப்போதும் கிரிக்கெட்டை ரசித்து விளையாட வேண்டும் என்பதே கடந்த 5 ஆண்டுகளில் எனது தாரக மந்திரமாக உள்ளது. உலகக்கோப்பை தொடரையும் ரசித்து விளையாட விரும்புகிறேன்.
இந்திய அணியின் ஊடக மேலாளரிடம் என்னை செய்தியாளர்கள் சந்திப்பிற்கோ, நேர்காணல் கொடுக்கவோ அழைக்காதீர்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் தினேஷ் கார்த்திக் நேர்காணல் செய்கிறார் என்பது தெரிந்த பின், எனக்கு அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.
உலகக்கோப்பை தயாரிப்புகளில் இந்திய வீரர்கள் அனைவரும் தீவிரமாக இருக்கிறோம். அதே போல் நானும் அழுத்தத்தை சமாளிக்கவும், வேரியேஷன்களிலும் கவனம் செலுத்தி வருகிறேன். இரு பக்கமும் பந்தை திருப்ப வேண்டும் என்று தீவிரமாக பயிற்சி மேற்கொள்கிறேன்.
உலகக்கோப்பை தொடரில் அனைத்து வீரர்களுக்கும் அழுத்தம் என்பது உச்சத்தில் இருக்கும். ஆனால் எனக்கு இந்த உலகக்கோப்பையை ரசித்து விளையாட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இது தான் இந்தியாவுக்காக எனது கடைசி உலகக்கோப்பை என்று சொல்லிக் கொண்டே இருந்தேன். அதனால் இதனை கொண்டாட்டமாக விளையாட வேண்டும். இவ்வாறு அஸ்வின் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us