/indian-express-tamil/media/media_files/2025/06/04/hJBstHKIu8yrxFMWlNfv.jpg)
ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணி கோப்பையை வென்றதை கொண்டாடும் விதமாக கூடி இருந்த ரசிகர்கள் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் 11 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
10 அணிகள் களமாடிய 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்ச்சை நடத்தின. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 18 ஆண்டுக்குப் பிறகு, முதன்முறையாக சாம்பியன் பட்டமும் வென்றது.
இந்நிலையில், 18 ஆண்டுக்குப் பின் வெற்றி பெற்ற ஐ.பி.எல் கோப்பையுடன் பெங்களூரு நகரின் முக்கிய சாலைகளில் திறந்தவெளி பேருந்தில் பேரணி செல்ல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி திட்டமிட்டது. கர்நாடக சட்டப்பேரவையான விதான சவுதாவில் முதல்வர் சித்தராமையாவை சந்தித்து, அங்கிருந்து எம் சின்னசாமி மைதானத்திற்கு திறந்தவெளி பேருந்தில் பயணம் மேற்கொள்ளவிருந்தது. ஆனால், பேரணி நடைபெறாது என்று உள்துறை அமைச்சர் பரமேஸ்வர ராவ் அறிவித்தார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்
இதேபோல், போக்குவரத்து நெரிசல் காரணமாக இந்தப் பேரணிக்கு பெங்களூரு போக்குவரத்து காவல்துறை அனுமதி மறுத்தது. இருப்பினும், பேரணி நடைபெற்றால் அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தது. இதையடுத்து, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மாலை 5 மணி முதல் பாராட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஆர்.சி.பி அணி வீரர்கள் மூடிய பேருந்தில் சின்னசாமி மைதானத்திற்கு சென்றனர். அவர்களை ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்ந்தனர். இதனால், ஆர்.சி.பி கொண்டாட்டத்தின் போது கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதேபோல், மைதானத்திற்கு வெளியிலும் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். அதனால், அப்பகுதியில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்
இந்த நிலையில், ஆர்.சி.பி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கடும் தள்ளுமுள்ளுவில் 11 பேர் உயிரிழந்ததாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும், 33 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தவர்களில் பலர் இளைஞர்கள் என்று கூறியுள்ள சித்தராமையா, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மன்னிப்பு கேட்ட டி.கே.சிவக்குமார்
இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டக் கொள்வதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "ஆர்.சி.பி மற்றும் கர்நாடகாவை நினைத்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். 18 ஆண்டுகள், நீண்ட போராட்டம். கோலியின் விசுவாசத்திற்கு ராயல்டி பணம் செலுத்தப்பட்டுள்ளது. இது கட்டுப்படுத்தக்கூடிய கூட்டம் அல்ல என்று நினைக்கிறேன். பெங்களூரு மற்றும் கர்நாடக மக்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், நாங்கள் ஊர்வலம் செல்ல விரும்பினோம், ஆனால் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது." என்று அவர் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.