Advertisment

ஆர்.சி.பி-யிடம் தோல்வி; சி.எஸ்.கே பிளே-ஆஃப்க்கு தகுதி பெற முடியும்: எப்படி தெரியுமா?

பெங்களூருவில் சனிக்கிழமை நடைபெறும் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டால், அது சென்னை அணி ரசிகர்களுக்கு நல்ல செய்தியாக இருக்கும். அப்படி நடந்தால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் கிடைக்கும்.

author-image
WebDesk
New Update
RCB vs CSK Chennai Super Kings IPL match playoffs scenarios in tamil

சென்னை அணியால் முதல் 2 இடத்துக்குள் முன்னேறும் சூழல் கூட உள்ளது. அதற்கு, ராஜஸ்தான் அணி மீதமுள்ள ஒரு போட்டியில் தோற்க வேண்டும்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

RCB vs CSK IPL 2024 match | Chennai Super Kings | Royal Challengers Bangalore: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான லீக் சுற்றில் இன்னும் 6 ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், அடுத்த சுற்றான பிளே-ஆஃப்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரண்டு அணிகள் மட்டும் அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளன. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: Can Chennai Super Kings still qualify if they don’t win IPL match against RCB? Yes, here’s how

குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய மூன்று அணிகளும் பிளே-ஆஃப் சுற்றில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளன. மீதமுள்ள 2 இடங்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. 

பெங்களூரு அணி இந்த சீசனில் அதன் தொடக்கப் போட்டிகளில் தோல்வி பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு தள்ளாடி வந்தது. ஆனால், அந்த அணி கடைசியாக ஆடிய 5 போட்டிகளில் அதிரடியாக வெற்றியைப் பெற்று திருப்புமுனையைப் பெற்றது. தற்போது பெங்களூரு 13 ஆட்டங்களில் 6 வெற்றி, 7ல் தோல்வி என 12 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருக்கிறது. 

இந்நிலையில், பெங்களூரு அணி தனது பிளே-ஆஃப் வாய்ப்பை மேலும் பிரகாசப்படுத்த சென்னை அணிக்கு எதிராக வருகிற சனிக்கிழமை (மே 18) சொந்த மண்ணில் நடக்கும் கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற வேண்டும். நல்ல நெட் ரன்ரேட்டில் வெற்றி பெற்றால் அது அவர்களுக்கு கூடுதல் பலம் சேர்க்கும். அதேநேரத்தில், சென்னை அணி பிளே-ஆஃப்க்குள் நுழைய, பெங்களூருவுக்கு எதிராக வெறும் வெற்றி மட்டும் போதும். ஆதலால், இவ்விரு அணிகளுக்கு இடையே நடக்கும் ஆட்டம், லீக் சுற்றில் அரங்கேறும் நாக்-அவுட் போட்டியாகப் பார்க்கப்படுகிறது. 

ஒருவேளை பெங்களூருவுக்கு எதிராக தனது லீக் ஆட்டத்தில் சென்னை அணி தோல்வியுற்றால் என்ன நடக்கும்?, சென்னை அணியால் இன்னும் பிளே-ஆஃப்க்குள் செல்ல முடியுமா? என்பது போன்ற கேள்விகள் ரசிகர்கள் மனதில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. 

ஆர்.சி.பி-யிடம் தோற்றாலும் சி.எஸ்.கே பிளே-ஆஃப்க்கு தகுதி பெறுமா? என்றால், ஆம் என்று கூறலாம். அதற்கு சென்னை அணி பெங்களூருவுக்கு எதிராக மோசமான தோல்வியைத் தவிர்த்தால் மட்டும் போதுமானதாக இருக்கும். 

இப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெறும் பட்சத்தில் பிளேஆஃப் சுற்றில் அவர்களுக்கு ஒரு இடம் உறுதியாகிவிடும். அத்துடன், சென்னை அணியால் முதல் 2 இடத்துக்குள் முன்னேறும் சூழல் கூட உள்ளது. அதற்கு, ராஜஸ்தான் அணி மீதமுள்ள ஒரு போட்டியில் தோற்க வேண்டும். மேலும், ஐதராபாத் அணி அதன் மீதமுள்ள 2 போட்டிகளில் ஒன்றில் தோற்க வேண்டும். 

இதுஒருபுறமிருக்க, பெங்களூருவில் சனிக்கிழமை நடைபெறும் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டால், அது சென்னை அணி ரசிகர்களுக்கு நல்ல செய்தியாக இருக்கும். அப்படி நடந்தால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் கிடைக்கும். அது பெங்களூரு அணியை சென்னைக்கு கீழே வைத்திருக்கும். இல்லையெனில், சென்னை தோற்றால், தோல்வியின் வித்தியாசம் 17 ரன்களுக்கு அருகில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 

உதாரணமாக, பெங்களூரு அணி ஸ்கோர் 200 என்றால், சென்னை அணி குறைந்தபட்சம் 182 ரன்களை எடுக்க வேண்டும். பெங்களூரு சேசிங் செய்தால் 18.1 ஓவர்களுக்குள் தோல்வியடையாமல் இருப்பதை சென்னை உறுதி செய்ய வேண்டும். இது சென்னை அணியின் நெட் ரன்ரேட்டை பெங்களூருவுக்கு மேலே வைத்திருக்க உதவும். 

ஆர்.சி.பி எப்படி பிளே-ஆஃப்க்கு தகுதி பெற முடியும்?

பெங்களூரு அணி பிளே-ஆஃப்க்கு தகுதி பெற, சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய அவசியமாகும். அந்த அணி சென்னைக்கு எதிராக நல்ல நெட் ரன்ரேட்டில் வெற்றி பெறுவது முக்கியமில்லை. அவர்கள் முதலில் வெற்றி பெற வேண்டும். பிறகு அவர்கள், ஐதராபாத் அணி மீதமுள்ள இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியடைய வேண்டும் என்று நம்ப வேண்டும். 

இன்று வியாழக்கிழமை ஐதராபாத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி குஜராத் அணியை வீழ்த்தினால், பெங்களூரு அணி பிளே-ஆஃப்க்கு தகுதி பெற உள்ள ஒரே வழி, சென்னையை குறைந்தபட்சம் 18 ரன்கள் வித்தியாசத்தில் அல்லது 18.1 ஓவர்களில் சேஸ் செய்வதுதான்.

பெங்களூருவின் நெட் ரன்ரேட் +0.387 ஆகவும், சென்னையின் நெட் ரன்ரேட் +0.528 ஆகவும் இருக்கும் நிலையில், வெறும் வெற்றி மட்டும் பெங்களூரு அணிக்கு உதவாது. ஏனெனில் அது அவர்களை ஐதராபாத் மற்றும் சென்னைக்கு கீழே வைத்திருக்கும். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Royal Challengers Bangalore Chennai Super Kings IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment