Rinku-singh | India Vs South Africa: தென் ஆப்பிரிக்க மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கலந்துகொண்டுள்ளது. இந்த தொடருக்கான முதலாவது டி20 போட்டி டர்பனில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) நடக்க இருந்த நிலையில், பலத்த மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
2-வது டி20: இந்தியா- தென் ஆப்பிரிக்கா மோதல்
இந்த நிலையில், இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டி20 போட்டி கெபேஹா நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் ஸ்டேடியத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடந்தது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
போட்டியின் கடைசி ஓவரின் போது மழை குறுக்கிட்டதால், 19.3 ஓவர்களுடன் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிரடியாக விளையாடிய ரிங்கு சிங் 68 ரன்களும், கேப்டன் சூரியகுமார் யாதவ் 56 ரன்களும் எடுத்தனர்.
மழை காரணமாக போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு 152 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனைத் துரத்திய அந்த அணி 13.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில்1-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி முன்னிலை பெற்றுள்ளது.
கண்ணாடியை துடைத்த ரிங்கு
இந்நிலையில், இந்தப் போட்டியில் தனது அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்திய அணியின் ரிங்கு சிங் 39 பந்துகளில் 9 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு மிரட்டினார். அவர் விளாசிய 2 சிக்ஸர்களில் ஒன்று நேராக பறந்து மீடியா பாக்ஸுக்கு முன்பு இருந்த கண்ணாடியில் பட்டது. பந்து வேகமாக வந்த நிலையில், அது கண்ணாடியில் பெரிய விரிசலை ஏற்படுத்தியது.
"அவர் விளாசிய அந்த சிக்சரைப் பாருங்கள். ஆனால் அது விலை உயர்ந்தது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பந்து மீடியா பாக்ஸ் கண்ணாடியை உடைத்துள்ளது. அதன் புகைப்படம் நம்மிடம் உள்ளது.
ரின்கு சிங் அவர்களின் கண்ணாடி ஜன்னல்களில் ஒன்றை உடைத்ததில் க்கெபெர்ஹா ஸ்டேடிய நிர்வாகிகள் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள்." என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெய்ன் கூறினார்.
மன்னிப்பு கேட்ட ரிங்கு
இருப்பினும், மீடியா பாக்ஸ் கண்ணாடியை உடைத்தற்கு ரின்கு சிங் மன்னிப்பு கோரினார். பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ள வீடியோவில் "நான் அடித்தது கண்ணாடியை உடைக்கும் என்று எனக்குத் தெரியாது. அதற்காக மன்னிக்கவும்" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“