மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸில் விளையாட களத்திற்கு வந்த ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னை கலாய்த்து தள்ளியுள்ளார் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்.
மெல்போர்னில் நடந்து வரும் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா வெற்றியை நோக்கி நடைபோட்டு வருகிறது. இந்தியாவின் 399 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் ஆஸ்திரேலியா, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இந்தியா vs ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட் லைவ் ஸ்கோர் கார்டை காண இங்கே க்ளிக் செய்யவும்
ஐந்து விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தள்ளாடி வரும் நிலையில், கேப்டன் டிம் பெய்ன் களமிறங்கினார். அவர் கிரீஸ் வந்த உடனேயே, அருகில் ஃபீல்டிங் செய்துக் கொண்டிருந்த மாயங்க் அகர்வாலிடம், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கலாய்க்கத் தொடங்கினார்.
" 'தற்காலிக கேப்டன்' என்ற வார்த்தையை கேள்விப்பட்டு இருக்கிறாயா?" என்று மாயங்கிடம் கேட்ட ரிஷப் பண்ட், இன்று நாம் அந்த வார்த்தையை கற்றுக் கொள்ளப் போகிறோம் என்று டிம் பெய்னை குறிப்பிடும் விதமாக கிண்டல் செய்தார்.
பிறகு, "இவருக்கு பேசுவது மட்டுமே பிடிக்கும்... பேசிக் கொண்டே இருப்பார்" என்று மீண்டும் கலாய்த்த ரிஷப், பவுலரை நோக்கி, "இவரை அவுட்டாக்க வேண்டுமா? பந்து வீசு... அதுவே போதும்" என்று கூற, சிரிப்பை அடக்க முடியாமல் மாயங்க் தவித்தார்.
இவையனைத்தும், ஸ்டெம்ப் மைக்கில் தெளிவாக பதிவாகியுள்ளது.
முன்னதாக, நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது ரிஷப் பண்ட் பேட் செய்ய வந்த போது கிண்டல் செய்த டிம் பெய்ன், "ஒன்டே தொடருக்கு தோனி வர்றாராம்... நீ வேணும்-னா எங்களுடைய ஹரிகேன்ஸ் டீமுக்கு போய் விளையாடுறியா? அப்டியே உன்னுடைய ஆஸ்திரேலியா விடுமுறைய ஜாலியை நீட்டிச்சிக்கோ" என்று அவரை பேட்டிங்கை தொந்தரவு செய்யும் விதமாக பேசிக் கொண்டு இருந்தார்.
அதற்கு பதிலடியாகத்தான், "இவருக்கு பேச மட்டுமே தெரியும் என்றும், சும்மா பவுல் பண்ணாலே அவுட்டாகிடுவார்" என பதில் கலாய்களை அள்ளி வீசியிருக்கிறார் ரிஷப்.
இறுதியில் ரிஷப் பண்ட் கையாலேயே அவுட்டாக டிம் பெய்ன் நொந்தே போய்விட்டார். ஜடேஜா ஓவரில், ஸ்டெம்ப் அருகே நின்றுக் கொண்டிருந்த ரிஷப்பிடம் கேட்ச் கொடுத்து 26 ரன்களில் சோகத்துடன் வெளியேறினார் .