உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளை (ஜூன் 7) நடைபெற உள்ள நிலையில், பயிற்சியின் போது இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 2 ஆவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நாளை நடக்கிறது. இந்தப்போட்டி ஜூன் 7 ஆம் தேதி முதல் ஜூன் 11 ஆம் தேதி வரை நடைபெறும். இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப்போட்டி, இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பலத்த வாய்ந்த இரு அணிகளும் மோதுவதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்: பந்து இப்படித்தான் பவுன்ஸ் ஆகுமா? ஓவல் பிட்ச் பராமரிப்பாளரிடம் போட்டு வாங்கிய அஷ்வின்
இந்தநிலையில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் இன்று பயிற்சி மேற்கொண்டனர். அப்போது, ரோகித் சர்மாவிற்கு இடது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அணியின் பிஸியோதெரபிஸ்ட் சிகிச்சை அளித்தார். தொடர்ந்து ரோகித் சர்மா பயிற்சியிலிருந்து வெளியேறினார்.
பின்னர் இடது கை பெருவிரலில் ஏற்பட்ட காயத்திற்கு பேண்டேஜ் அணிந்து கொண்டார். எனினும், அவர் பயிற்சியில் தீவிரமாக இருந்தார். காயத்தையும் பொருட்படுத்தாமல் அவர் பயிற்சி மேற்கொண்டு வந்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு கையில் அணிந்து கொண்ட பேண்டேஜ்ஜை நீக்கியுள்ளார். இதனிடையே ரோகித் சர்மாவுக்கு ஏற்பட்ட காயம் தீவிரமானதல்ல என்று தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னதாக ரோகித் சர்மா கையில் காயம் ஏற்பட்டது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கு முன்னதாக ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்து மைதானம் மோசமாக இருப்பதாகவும், இதனால், இந்திய வீரர்கள் காயம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறியிருந்தார். இங்கிலாந்து சூழல் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக இருப்பதால், இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலியா வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஆஸி, முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil