Rohit Sharma | Inzamam Ul Haq | T20 World Cup 2024: 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கும் இந்த தொடரில் இந்தியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில், டி20 உலகக்கோப்பை தொடருக்கான சூப்பர் 8 சுற்றில் இந்தியா அதன் கடைசி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்காக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் 92 ரன்கள் குவித்து அசத்தினார். இதனால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது.
ஆங்கிலத்தில் படிக்கவும்:
தொடர்ந்து, 206 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம், இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த தோல்வியின் மூலம் ஆஸ்திரேலியா சுப்பர் 8 சுற்றுடன் தொடரிலிருந்து வெளியேறியது.
இன்சமாம் குற்றச்சாட்டு
இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதிய போட்டியின் போது, இந்திய அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் பரபரப்பான குற்றம் சாட்டை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “அர்ஷ்தீப் சிங் 15-வது ஓவரை வீசும்போது, பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆனது என்பதை நீங்கள் புறக்கணிக்க முடியாது. புதிய பந்து எப்படி இவ்வளவு சீக்கிரமே ரிவர்ஸ் ஸ்விங் ஆகத் தொடங்கும்.
12-13வது ஓவரில் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகத் தயாராக இருந்தது. அதனால் தான் சொல்கிறேன், போட்டி நடுவர்கள் தங்கள் கண்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும். ரிவர்ஸ் ஸ்விங் பற்றி எங்களுக்கும் ஓரளவு தெரியும். அர்ஷ்தீப் சிங் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடிந்தால், பந்தின் மீது எதோ சந்தேகத்திற்குரிய வேலை செய்யப்பட்டுள்ளது.
ரிவர்ஸ் ஸ்விங்கில் உள்ள விஷயம் என்னவென்றால், பும்ரா அதைச் செய்யலாம். ஏனென்றால், அவரது பவுலிங் ஆக்சன் அப்படி இருக்கும். அதை என்னால் புரிந்து கொள்ள முடியும். பந்தை ரிவர்ஸ் ஸ்விங்கிற்கு ஏற்ப மாற்ற அதனை அந்த வகையில் அமைக்க வேண்டும். ஒரு வேளை பந்து அதிகமாக அடிக்கப்பட்டிருக்கலாம், பிட்ச் அப்படி இருந்திருக்கலாம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஸ்டாண்டுகளைச் சுற்றி அடித்த பிறகு பந்து தாக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அது என்ன நடந்தாலும், நடுவர்கள் கவனமாகக் கண்காணித்திருக்க வேண்டும்” என்று இன்சமாம் கூறியிருந்தார்.
பதிலடி
இந்த நிலையில், இன்சமாம் உல் ஹக்கின் ரிவர்ஸ் ஸ்விங் குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா தக்க பதிலடி கொடுத்துள்ளார். இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது அரையிறுதி ஆட்டம் இன்று வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு கயானாவில் நடைபெறும் நிலையில், அதற்கு முன்னதாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், இன்சமாம் கூறியது பற்றி இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேட்கப்பட்டது.
அப்போது அவர், "இங்கே வெயில் காரணமாக ஆடுகளம் சூடாக இருக்கிறது. அதனால் ஆடுகளங்கள் வறண்டு காணப்படுகின்றன. அதனால் நான் கேட்கிறேன், பந்து இங்கே ரிவர்ஸ் ஸ்விங் ஆகவில்லை என்றால், எங்கே ரிவர்ஸ் ஸ்விங் ஆகும்? நாங்கள் இங்கிலாந்திலோ அல்லது தென் ஆப்பிரிக்காவிலோ விளையாடவில்லை" என்று அவர் பதிலடி கொடுத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“