இந்திய கிரிக்கெட் அணியின் ஒரு நாள் மற்றும் டி20 முழு நேர கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற முதல் ஒரு நாள் ஆட்டத்தில் வெற்றி கணக்கை தொடங்கியுள்ளார் ரோஹித் சர்மா.
இந்தியாவை பொறுத்தவரை கேப்டனாக செயல்படுபவர்கள் நன்கு விளையாடி அதிக ரன்களை குவிக்கவும் வேண்டும் அதே சமயம் கேப்டன் பொறுப்பையும் சிறப்பாக செய்து அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டும்.
இல்லையெனில் ரசிகர்களின் கோபத்துக்கு கேப்டன் ஆளாகிவிடுவார்.
மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த ரோஹித் சர்மா, ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன் அணியை வழிநடத்தி 5 முறை சாம்பியன் பட்டம் வென்று தந்தவர்.
விராட் கோலி கேப்டன்ஷிப் பொறுப்பை ராஜிநாமா செய்த பிறகு, ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து முழு நேர கேப்டனாக தனது முதலாவது ஆட்டத்தை மே.இ.தீவுகளுக்கு எதிராக தொடங்கினார் ரோஹித் சர்மா.
அனுபவம் கொண்ட வீரர்களான ஷிகர் தவன், ஸ்ரேயஸ் ஐயர் உள்ளிட்டோர் கடைசி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட விராட் கோலி, யுவேந்திர சாஹல், ரிஷப் பந்த் ஆகியோர் மட்டுமே அனுபவம் கொண்ட வீரர்களாக இருந்தனர்.
இவர்களை வைத்துக் கொண்டு அரை சதம் பதிவு செய்ததுடன் முழு நேர கேப்டனாக முதல் ஆட்டத்திலேயே வெற்றிக் கணக்கைத் தொடங்கியுள்ளார் ரோஹித்.
இதனிடையே இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அளித்த பேட்டி ஒன்றில் 10க்கு 9.99 மதிப்பெண்ணை ரோஹித்துக்கு அளிக்கலாம். மே.இ.தீவுகளுக்கு எதிரான சிறப்பாக கேப்டன் பதவியை வகித்தார் என்று தெரிவித்தார்.
யு-19 உலகக் கோப்பையில் இந்தியா வெற்றி:
வி.வி.எஸ். லட்சுமண் பாராட்டு
19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்நிலையில், தேசிய கிரிக்கெட் அகாடெமியின் தலைவரும், ஜூனியர் அணிக்கு நிறைய ஆலோசனைகளை வழங்கி வழிகாட்டியுமாக செயல்பட்ட முன்னாள் வீரர் லட்சுமண் கூறியதாவது:
முதலில் ஜூனியர் அணியின் தேர்வு கமிட்டிக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். இது புதிய தேர்வு கமிட்டி. உறுப்பினர்களுக்கு சரியான வீரர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்வது சவாலாக இருந்திருக்கும்.
நமது அணி அந்த சவால்களை கடந்து வெற்றியாக்கிய விதமும், நேர்மறையான அணுகுமுறையும் பாராட்டுக்குரியது என்று அவர் தெரிவித்தார்.
மகளிர் ஆசிய கால்பந்து: சீனா வெற்றி
மகளிருக்கான 20-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் நவிமும்பையில் பிப்ரவரி 6ம் தேதி நடந்த இறுதி ஆட்டத்தில் சீனா- தென்கொரியா அணிகள் மல்லுகட்டின.
சீனா 3-2 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி 9-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. சீனா கடைசியாக 2006-ம் ஆண்டில் இந்த கோப்பையை வென்று இருந்தது.
இந்த போட்டியில் பங்கேற்ற இந்திய அணியில் பல வீராங்கனைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் முதல் சுற்றுடன் வெளியேற்றப்பட்டது நினைவு கூரத்தக்கது.
மகாராஷ்ர ஒபன்: போபண்ணா-ராம்குமார் இணை சாம்பியன்
மகாராஷ்டிர ஓபன் டென்னிஸ் போட்டியில், ஆடவர் இரட்டையர் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் ராம்குமார் ராமநாதன் ஆகியோர் ஆஸ்திரேலிய நாட்டின் லூக் சாவில்லே மற்றும் ஜான் பேட்ரிக் ஸ்மித் ஆகியோரை எதிர்த்து விளையாடினர்.
இந்த இறுதி போட்டி ஒரு மணிநேரம் மற்றும் 45 நிமிடங்கள் நீடித்தது. இதில், 7-6, 3-6, 6-10 என்ற செட் கணக்கில் இந்திய வீரர்கள் வெற்றி பெற்று சாம்பியன் ஆனர்.
இதன்மூலம், போபண்ணா வெல்லும் 21வது சர்வதேச டென்னிஸ் பட்டம் இதுவாகும்.
நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு இந்திய
அணியில் வாய்ப்பு கிடைக்கப் பெற்ற வீரர்
நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு குஜராத் மாநிலம், பரோடாவைச் சேர்ந்த இந்திய இளம் வீரர் தீபக் ஹூடாவுக்கு மே.இ.தீவுகளுக்கு எதிரான
தொடரில் இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தது.
அந்த ஆட்டத்தில் 32 பந்துகளை எதிர்கொண்டு 26 ரன்களை எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார் தீபக் ஹூடா.
முன்னதாக, முன்னாள் கேப்டன் விராட் கோலி அணியில் சேர்ந்ததற்கு அடையாளமாக அவருக்கு கேப் வழங்கினார்.
இந்த காணொலியையும் அவர் ட்விட்டரில் ஷேர் செய்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், தாய்நாட்டுக்காக விளையாடியது பெருமைக்குரியதாக இருக்கிறது. எனது கனவு நனவானது. முன்னாள் கேப்டன் விராட் கோலியிடம் இருந்து கேப் பெற்றேன். அனைவருக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் ஆகிய ஐபிஎல் அணிகளிலும் இவர் விளையாடியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ''
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.