இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது. அதன்படி, லக்னோ அணியில் இருந்து மிட்சேல் மார்ஷ் மற்றும் எய்டன் மார்க்ரம் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இவர்களில் மிட்சேல் மார்ஷ் 4 ரன்களில் ஜொஃப்ரா ஆர்சர் பந்து வீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அடுத்ததாக வந்த நிக்கோலஸ் பூரன் 11 ரன்களிலும், கேப்டன் ரிஷப் பண்ட் 3 ரன்களிலும் ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்திய எய்டன் மார்க்ரம் அரை சதம் விளாசினார். அவருடன் ஆயுஷ் படோனியும் கரம் கோர்த்து அணியின் ரன்களை கணிசமாக உயர்த்தினர்.
அந்த வகையில், 45 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர் விளாசிய எய்டன் மார்க்ரம், ஹசரங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மற்றொரு புறம், 34 பந்துகளில் 5 பவுண்டரி, 1 சிக்ஸர் அடித்து 50 ரன்கள் குவித்த படோனியின் விக்கெட்டை தேஷ்பாண்டே வீழ்த்தினார். இதன் பின்னர், டேவிட் மில்லர் மற்றும் அப்துல் சமத் ஆகியோர் விளையாடினர். இதில் அதிரடி காட்டிய அப்துல் சமத், 10 பந்துகளில் 4 சிக்சர்களுடன் 30 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
முடிவாக 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு லக்னோ அணி 180 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணியில் இருந்து ஜோஃப்ரா ஆர்சர், சந்தீப் ஷர்மா, தேஷ்பாண்டே ஆகியோர் தலா ஒரு வெக்கெட்டும், ஹசரங்கா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு
181 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
ராஜஸ்தான் அணியில் இருந்து ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூரியவன்சி ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இவர்கள் இருவரும் அதிரடியாக ஆடி, லக்னோ பௌலர்களை சிதறடித்தனர். அதன்படி, 20 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் விளாசிய வைபவ் சூரியவன்சியின் விக்கெட்டை எய்டன் மார்க்ரம் கைப்பற்றினார்.
மறுமுனையில், 52 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் அடித்த ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை அவேஷ் கான் வீழ்த்தினார். அடுத்ததாக களமிறங்கிய நிதிஷ் ரானா 8 ரன்களில் ஆட்டமிழக்க, ரியான் பராக் மட்டும் அணியின் ரன்ரேட்டை உயர்த்தினார். எனினும், 39 ரன்கள் எடுத்த நிலையில், தனது விக்கெட்டை அவேஷ் கானிடம் இழந்தார்.
அடுத்தடுத்து களம் இறங்கிய வீரர்கள் ரன்களை குவிக்க தடுமாறினர். இறுதியாக துருவ் ஜுரெல் 6 ரன்களுடனும், ஷுபம் துபே 3 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனால், 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன்களை மட்டுமே ராஜஸ்தான் அணியால் எடுக்க முடிந்தது. அந்த வகையில், 2 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி த்ரில் வெற்றி பெற்றது.
லக்னோ அணியில் இருந்து அவேஷ் கான் 3 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் மற்றும் எய்டன் மார்க்ரம் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: RR vs LSG LIVE Cricket Score, IPL 2025