ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 59-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் அணி, ஷ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர் கொண்டது. இந்த ஆட்டத்திற்கான வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி, பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரியன்ஷ் ஆர்யா- பிரம்சிம்ரன் சிங் களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அதிரடியாக தொடங்கிய பிரியன்ஷ் ஆர்யா, நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மிச்செல் ஓவன் டக் அவுட் ஆகி ஏமாற்றினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன பிரம்சிம்ரன் சிங் 21 ரன்களில் நடையை கட்டினார்.
இந்த இக்கட்டான சூழலில் கைகோர்த்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்- நேஹல் வதேரா ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டது. ஸ்ரேயாஸ் ஒருபுறம் நிதானமாக விளையாட வதேரா அதிரடியாக விளையாடினார். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பிரிந்தது. ஸ்ரேயாஸ் ஐயர் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஷசாங்க் சிங் களமிறங்கினார். இருவரும் ராஜஸ்தான் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். வதேரா 37 பந்துகளில் 70 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஓமர்சாயும் வேகமாக மட்டையை சுழற்ற பஞ்சாப் 200 ரன்களை கடந்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் 5 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் குவித்துள்ளது. ஷசாங்க் சிங் 59 ரன்களுடனும், ஓமர்சாய் 21 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் தரப்பில் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ராஜஸ்தான் களமிறங்கியது.
அதன்படி, ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் சூரியவன்ஷி ஆகியோர் வலுவான தொடக்கம் அமைத்தனர். குறிப்பாக இருவரும் பவுண்டரிகளும், சிக்ஸருமாக பறக்க விட்டனர். இதில் ஜெய்ஸ்வால் 50 ரன்கள் எடுத்த நிலையில், ஹர்ப்ரீத் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்தபடியாக, சூரியவன்ஷியின் விக்கெட்டையும் கைப்பற்றி ஹர்ப்ரீத் அசத்தினார்.
இதனால் 40 ரன்களுடன் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்த சூரியவன்ஷி பெவிலியன் திரும்பினார். அடுத்தபடியாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 20 ரன்களிலும், ரையான் பராக் 13 ரன்களிலும் வந்த வேகத்தில் வெளியேறினர். எனினும், துருவ் ஜுரேல் பொறுப்பாக ஆடி அணியின் ரன்ரேட்டை உயர்த்தினார். ஆனால், மறுபுறம் ஆடிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.
இறுதியாக 31 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் விளாசி 53 ரன்கள் குவித்த துருவ் ஜுரேல், மார்கோ ஜென்சன் பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்தார். மேலும், ஷிம்ரான் 11 ரன்கள், ஷுபம் தூபே 7 ரன்கள், ஹஸரங்கா ரன்கள் ஏதும் எடுக்காமலும் நடையைக் கட்டினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது.
பஞ்சாப் தரப்பில், ஹர்ப்ரீத் 3 விக்கெட்டுகளும், ஜென்சன் மற்றும் அஸ்மத்துல்லாஹ் ஓமர்ஸாய் ஆகியோர் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.