ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் டி20 லீக் தொடர் (எஸ்.ஏ.20 ஓவர் லீக்) கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. இதன் 3-வது சீசன் கடந்த 9 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், எஸ்.ஏ டி20 தொடரை மேலும் சுவரசியப்படுத்தவும், கூடுதலாக ரசிகர்களை கவரும் வகையிலும் தொடரின் போட்டிகளை பார்க்க வரும் ரசிகர்களுக்கு என ஒரு பரிசுப் போட்டி அறிவிக்கப்பட்டது.
எஸ்.ஏ டி20 போட்டிகளில் அடிக்கப்படும் சிக்ஸர்களை ரசிகர்கள் ஒற்றை கையால் கேட்ச் பிடித்தால் அவர்களுக்கு ஒரு மில்லியன் ரான்ட், அதாவது இந்திய மதிப்புப்படி 45 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று தொடரின் விளம்பரதாரரான பெட்வே என்ற நிறுவனம் அறிவித்தது. மேலும், அந்த கேட்ச்சை பிடிக்கும் ரசிகர் பெட்வே இணையதளத்தில் அல்லது ஆப்-பில் பதிவு செய்து இருந்தால், அவருக்கு இரண்டு மடங்காக பரிசு பணம் அளிக்கப்படும் எனவும் கூறியது. அதிகபட்சமாக 90 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டது.
இந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் 17-வது ஓவரின் போது டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வீரர் கேன் வில்லியம்சன் முட்டி போட்டு மிகப்பெரிய சிக்ஸ் ஒன்றை அடித்தார்.
அந்த சிக்ஸரை ரசிகர்கள் அமரும் பகுதியில் இருந்த ரசிகர் ஒருவர் ஒற்றை கையால் கேட்ச் பிடித்தார். அதன் மூலம் அவர் பரிசு பணம் வென்று அசத்தினார். அவர் அந்த இணையதளத்தில் பதிவு செய்து இருந்ததால் அவருக்கு இரண்டு மில்லியன் ரான்ட் (ரூ.90 லட்சம்) பரிசாக அறிவிக்கப்பட்டது. இதுபோன்ற பரிசுப் போட்டிகளை ஐ.பி.எல் தொடரிலும் அறிமுகப்படுத்த வேண்டும் ரசிகர்கள் பலரும் கோரிக்கை விடுதிட்டுள்ளனர்.