SAFF Championship 2023: India vs Pakistan Tamil News: 14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) முதல் ஜூலை 4ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்கும் நிலையில், அவர் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு, 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, குவைத், நேபாளம், பாகிஸ்தான் அணிகளும், 'பி' பிரிவில் லெபனான், மாலத்தீவு, பூடான், வங்காளதேசம் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். சர்வதேச கால்பந்து சங்கத்தால் இலங்கை அணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த அணி இந்த போட்டிக்கு வர முடியவில்லை. மேற்கு ஆசியாவை சேர்ந்த லெபனான், குவைத் ஆகிய நாட்டு அணிகள் சிறப்பு அழைப்பின் பேரில் இந்த போட்டியில் கலந்து கொள்கின்றன.
தொடக்க நாளான இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதலாவது லீக் ஆட்டத்தில் (மாலை 3.30 மணி) குவைத்-நேபாளம் அணிகள் மோதுகின்றன. தரவரிசையில் குவைத் அணி 143-வது இடத்திலும், நேபாளம் 174-வது இடத்திலும் உள்ளன.
இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை
இந்நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் 8 முறை சாம்பியனான இந்திய அணி, பரம போட்டியாளரான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
தாமதம்
பாகிஸ்தான் கால்பந்து அணி, இந்தியா வருவதற்கான விசாவுக்கு இந்திய தூதகரம் திங்கட்கிழமை இரவு அனுமதி அளித்து விட்டதால் அந்த அணி வருவதில் நீடித்து வந்த சிக்கல் சுமுகமாக முடிவுக்கு வந்துள்ளது. இருப்பினும், அவர்களின் அணியில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் போட்டி தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தான் பெங்களூருவை அடைவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மொரீஷியஸ் சென்ற பாகிஸ்தான் அணி நான்கு நாடுகள் போட்டியில் விளையாடிவிட்டு ஜூன் 18ஆம் தேதி இந்தியா புறப்பட இருந்தது. ஆனால் நிர்வாக செயல்முறைகளில் தாமதம் காரணமாக முதலில் பாகிஸ்தான் விளையாட்டு வாரியத்திடமிருந்து தடையில்லாச் சான்றிதழை வழங்குதல், பின்னர் இந்திய அரசாங்கத்திடமிருந்து விசாக்கள் என அவர்கள் ஞாயிற்றுக்கிழமை தங்கள் விமானத்தை தவறவிட்டனர்.
மொரிஷியஸை விட்டு வெளியேறியதில் இருந்து, அவர்கள் கடந்த 17 மணிநேரமாக பயணத்தில் இருக்கிறார்கள். போட்டியை மாற்றி வைக்க அமைப்பாளர்களிடம் பாகிஸ்தான் கோரிக்கைகள் வைத்த நிலையில், அவை ஏற்கப்படவில்லை. இ.எஸ்.பி.என் (ESPN) அறிக்கையின்படி. பாகிஸ்தான் முறையான கோரிக்கை எதுவும் வைக்கப்படவில்லை என்பதை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்துள்ளது.
பாகிஸ்தான் அணி இன்று அதிகாலை 1 மணிக்கு மும்பையில் தரையிறங்கியது. முன்னதாக, வீரர்களுக்கு ஒரே விமானத்தில் 32 டிக்கெட்டுகள் கிடைக்காததால், அணி மும்பை மற்றும் பெங்களூருக்கு இரண்டு விமானங்களாகப் பிரிக்கப்பட்டது. இருப்பினும், விமான நிலையத்தில் தாமதம் ஏற்பட்டதால், 14 வீரர்களை கொண்ட இரண்டாவது குழு தங்களது விமானத்தை தவறவிட்டனர்.
ஆடும் லெவன் அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் இந்த குழுவில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அந்த குழுவிற்கு இடமளிக்க பாகிஸ்தான் நிர்வாகம் மற்றொரு விமானத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மும்பையில் இருந்து காலை 9:15 மணிக்கு புறப்பட்ட விமானத்தில் அவர்கள் 11 மணியளவில் பெங்களூரு சென்றடைந்தனர். மதியம் 1 மணிக்குள் கந்தீரவா ஸ்டேடியத்திற்கு அருகில் உள்ள அவர்களது ஹோட்டலுக்கு வீரர்கள் வந்துவிடுவார்கள் என்று இ.எஸ்.பி.என் அறிக்கை கூறியுள்ளது.
தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் (SAFF) போட்டியில் பாகிஸ்தான் தொடர்ந்து நான்கு முறை வெளியேறியுள்ளது. செப்டம்பர் 2018க்குப் பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான முதல் கால்பந்து போட்டியாக இன்று நடைபெறும் ஆட்டம் இருக்கும். பாகிஸ்தான் அணி ஜூன் 24 அன்று குவைத்தையும், ஜூன் 27 அன்று நேபாளத்தையும் எதிர்கொள்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil