ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: BCCI should not allow Gautam Gambhir to address press conferences: Sanjay Manjrekar
இதனிடையே, சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-3 என்கிற கணக்கில் படுதோல்வியை சந்தித்தது. 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு, 18 தொடர்களில் தோல்வியடையாமல் ரன் குவித்த இந்தியாவின் முதல் தொடர் தோல்வி இதுவாகும். இதனால், இந்திய அணியையும், பயிற்சியாளர் கவுதம் கம்பீரையும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், டெஸ்ட் தொடருக்காக ஆஸ்திரேலியா புறப்படுவதற்கு முன்னதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சொந்த காரணங்களுக்காக பெர்த்தில் நடக்கும் தொடக்கப் போட்டியை கேப்டன் ரோகித் தவற விட்டால், இந்திய அணியை வழிநடத்தப்போவது யார்?, தொடக்க வீரராக களமாட போவது யார்? போன்ற கேள்விகளுக்கு பதிலளித்தார். மேலும், அவரையும் அவரது தலைமையிலான இந்திய அணியையும் விமர்சிப்பவர்களையும் தனது வழக்கமான பாணியில் பதிலடி கொடுத்தார்.
இந்த நிலையில், ஊடகவியலாளர்களிடம் கேள்விகளை கேட்கவும், பத்திரிகையாளர் சந்திப்பில் பேசவும் கவுதம் கம்பீருக்கு தெரியவில்லை என்றும், அதனால் பி.சி.சி.ஐ கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தலைமை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோரை மட்டுமே செய்தியாளர்களிடம் பேச அனுமதிக்க வேண்டும் என்றும் கம்பீரை அனுப்பக்கூடாது என்றும் இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "செய்தியாளர் சந்திப்பில் கம்பீர் பேசுவதைப் பார்த்தேன். அவரை இதுபோன்ற கடமைகளில் இருந்து விலக்கி வைப்பது தான் பி.சி.சி.ஐ-க்கு நல்லது. அதுதான் புத்திசாலித்தனம். அவர் திரைக்குப் பின்னால் இருந்து மட்டும் வேலை செய்யட்டும். அவர்களுடன் உரையாடும் போது அவரிடம் சரியான நடத்தையோ அல்லது வார்த்தைகளோ இல்லை. ரோகித் மற்றும் அகர்கர், மீடியாவை எதிர்கொள்வதில் திறமையானவர்கள்" என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“