Rameshbabu Praggnanandhaa Tamil News: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், கடந்த வியாழக்கிழமை (ஜூலை 28 ஆம் தேதி) தொடங்கியது. அடுத்த புதன் கிழமை (ஆகஸ்ட் 10ம் தேதி) வரை நடைபெற உள்ள இப்போட்டியில் உலகம் முழுவதும் உள்ள 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு சிறப்பான முறையில் செய்து வருகிறது.
கடந்த வியாழக்கிழமையன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரமாண்ட தொடக்க விழாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இவ்விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாழைப்பழமும் கையுமாக பிரக்ஞானந்தா…

தற்போது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், போட்டியின் போது இந்திய இளம் வீரர் பிரக்ஞானந்தா ஒரு பெரிய வாழைப்பழத்துடன் கலந்து கொண்டு வருகிறார். அவர் வாழைப்பழத்தை கையில் எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவிடப்பட்டு வரும் நிலையில், அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இளம் வீரர் பிரக்ஞானந்தா, போட்டிக்கு வரும் போதெல்லாம் இப்படி வாழைப்பழத்தை கையில் எடுத்து வருகிறாரே, அது பசிக்கும் போது உண்ணவா? அல்லது அது ஒரு லக்கி ஃபேக்டரா? என சக போட்டியாளர்களும், அவரது ரசிகர்களும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.
ஆனால், தனக்கு பசிக்கும் போது உண்ணபதற்காகத் தான், அந்த வாழைப்பழத்தை போட்டியின் போது எடுத்து வருகிறார் பிரக்ஞானந்தா என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கூச்ச சுபாவம் கொண்ட பிரக்ஞானந்தா, போட்டி நடைபெறும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள ஸ்நாக்ஸ்களை உண்ண ரொம்பவே கூச்சபடுவாராம். அதனால், அவரது பெற்றோர் அவருக்கு பெரிய வாழைப்பழம் ஒன்றை வாங்கி, அவர் போட்டிக்கு களம் புகும் போதெல்லாம் கொடுத்து விடுகின்றனர். இதனால் தான், அவர் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடக்கும் இடத்தில் வாழைப்பழமும் கையுமாக வலம் வருகிறார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil