இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்த தொடருக்கான தொடக்கப் போட்டி வருகிற ஜூன் 20 முதல் ஹெடிங்லி லீட்ஸ் நகரில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு, புதிய கேப்டனை நியமிக்க தேர்வாளர்கள் முடிவு செய்துள்ளனர். அவர்களின் இந்த முடிவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ) ஆதரவு தெரிவிக்கும் என 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' அறிந்துள்ளது.
அதனால் ரோகித் சிறப்பு தொடக்க பேட்ஸ்மேனாக இங்கிலாந்து செல்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும், இது மாற்றத்திற்கான தேவையாலோ அல்லது வயதான வீரர்களை நீக்குவதாலோ அல்ல, மாறாக ரோகித்தின் செயல்திறன் மற்றும் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் அவரது ஃபார்மை அடிப்படையாகக் கொண்டது என்று புரிந்து கொள்ளப்படுகிறது. 38 வயதான அவர் இந்தியாவின் ஒருநாள் அணியில் தொடர்ந்து இருப்பார் என்று அறியப்படுகிறது.
ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியில் வெற்றி பெற்ற பிறகு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ரோகித்தை வழிநடத்த இந்திய அணி நிர்வாகம் எவ்வளவு ஆர்வமாக உள்ளது என்பதை நமது இணையப் பக்கத்தில் மார்ச் மாதம் செய்தி வெளியிட்டிருந்தோம். ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்கின் 'பியாண்ட் 23' பாட்காஸ்டில் சமீபத்தில் தோன்றிய ரோகித்தும், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோருடன் இங்கிலாந்தில் அணியை வழிநடத்துவதில் தனது உற்சாகத்தைப் பற்றிப் பேசியிருந்தார்.
இந்த சூழலில், இந்திய டெஸ்ட் அணியில் ரோகித்தின் எதிர்காலம் குறித்து தேர்வாளர்கள் கடந்த மாதம் தொடர்ச்சியான விவாதங்களை நடத்தினர். மேலும் பி.சி.சி.ஐ-யுடன் தங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு முன்பு நேற்று செவ்வாய்க்கிழமை மும்பையில் இந்த விவகாரம் குறித்து மீண்டும் விவாதித்தனர்.
"தேர்வுக்குழுக்களின் சிந்தனை செயல்முறை தெளிவாக உள்ளது. அவர்கள் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு ஒரு புதிய கேப்டனை விரும்புகிறார்கள். ரோகித் கேப்டனாக பொருந்தவில்லை, குறிப்பாக அவரது டெஸ்ட் கிரிக்கெட் ஃபார்மை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுத்துள்ளனர். அடுத்த டெஸ்ட் சுழற்சிக்கு ஒரு இளம் கேப்டனை உருவாக்க அவர்கள் விரும்புகிறார்கள். அதனால், ரோகித் அணியை வழிநடத்த மாட்டார் என்று தேர்வுக் குழு பி.சி.சி.ஐ-க்கு தெரிவித்துள்ளது," என்று இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் நெருங்கிய வட்டாரம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது காணப்பட்ட நிலைத்தன்மையின்மையை மீண்டும் செய்ய முடிவெடுப்பவர்கள் விரும்பவில்லை என்பது புரிந்து கொள்ளப்படுகிறது. அந்த தொடரில் ரோகித் ஐந்து இன்னிங்ஸ்களில் வெறும் 6.20 சராசரியை மட்டுமே கொண்டிருந்தார், மேலும் இறுதி டெஸ்டில் தன்னை கைவிட்டு விலகினார். அதற்கு முந்தைய டெஸ்ட் தொடரில், அதாவது கடந்த ஆண்டு இறுதியில் நியூசிலாந்திற்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில், அவர் மூன்று டெஸ்ட் போட்டிகளில் வெறும் 15.16 சராசரியை மட்டுமே கொண்டிருந்தார்.
அவரது டெஸ்ட் போட்டி ஃபார்மைக் கருத்தில் கொண்டு, தேர்வாளர்கள் அவரை கேப்டனாக ஆக்குவதில் தயக்கம் காட்டுகிறார்கள். சிறப்பு பேட்ஸ்மேனாக, செயல்திறன் சிறப்பாக இல்லாவிட்டால் அவரை விளையாடும் லெவன் அணியில் இருந்து நீக்கலாம். ஆனால் அவர் கேப்டனாக இருந்தால் அது சிக்கலாகிவிடும். இது அணியிலும் பாதகமான விளைவை ஏற்படுத்தும் என்று தெரிந்தவர்கள் கூறுகிறார்கள், இது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் உணரப்பட்டது.
மோசமான ஃபார்ம்
ரோகித் தனது இரண்டாவது குழந்தையின் பிறப்பு காரணமாக கடந்த ஆண்டு பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டுக்கு ஆஸ்திரேலியா செல்லவில்லை. அந்தப் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல் ராகுல் இன்னிங்ஸைத் தொடங்கினர். இரண்டாவது டெஸ்டுக்கு திரும்பியபோது, ரோகித் பேட்டிங் ஆடரில் கீழே வந்து ஆடினார். பின்னர் மெல்போர்னில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்டில் தொடக்க வீரராகத் திரும்பினார், இதன் பின்னர் சிட்னியில் நடந்த போட்டியில் இருந்து விலகினார்.
பும்ராவின் தலைமையில் முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது, ஆனால், ரோகித் தலைமையில் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை இழந்தது. இதேபோல், நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் நடந்த தொடரையும் இந்தியா 0-3 என்ற கணக்கில் இழந்தது.
ரோகித் 67 டெஸ்ட் போட்டிகளில் இருந்து 40.57 என்ற சராசரியைப் பெற்றுள்ளார். இந்தியாவுக்கு வெளியே டெஸ்ட் போட்டிகளில் அது 31.01 ஆகக் குறைந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் அவரது சராசரி 24.38 ஆகவும், தென் ஆப்பிரிக்காவில் 16.63 ஆகவும் உள்ளது. ஆனால் இந்தியா அடுத்து விளையாடும் இங்கிலாந்தில் சராசரி 44.66 ஆக உயர்ந்துள்ளது. தொடக்க வீரராக, இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் அவர் கிட்டத்தட்ட அதே சராசரியை (44.54) கொண்டுள்ளார்.
மே 6 அன்று, தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், இந்திய அணியில் ரோகித்தின் எதிர்காலம் குறித்த முடிவு தேர்வாளர்களால் மட்டுமே எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். "முதலில், ஒரு பயிற்சியாளரின் வேலை அணியைத் தேர்ந்தெடுப்பது அல்ல. தேர்வுக் குழுவினரின் வேலை. ஒரு போட்டியில் விளையாடும் 11 பேரை மட்டுமே பயிற்சியாளர் தேர்ந்தெடுப்பார். எனக்கு முன் பயிற்சி அளித்தவர்கள் தேர்வாளர்களும் அல்ல, நானும் ஒரு தேர்வாளரும் அல்ல.
ரோகித், கோலி சிறப்பாகச் செயல்படும் வரை, அவர்கள் அணியில் இருக்க வேண்டும். எப்போது தொடங்குவது, எப்போது முடிப்பது என்பது உங்கள் தனிப்பட்ட முடிவு. எந்த பயிற்சியாளரோ, தேர்வாளரோ அல்லது பி.சி.சி.ஐ-யோ எப்போது ஓய்வு பெற வேண்டும் என்று சொல்ல முடியாது. நீங்கள் சிறப்பாகச் செயல்பட்டால், ஏன் 40 வயது, 45 வயது வரை நீங்கள் ஜாலியாக விளையாட முடியும், உங்களை யார் தடுப்பது?.
2027 ஒருநாள் உலகக் கோப்பையை விளையாடுவது என்பது அவர்களின் செயல்திறனைப் பொறுத்தது. அது மட்டுமே அவர்களின் தேர்வை உறுதி செய்ய முடியும். அவர்களின் செயல்திறனைப் பற்றி நான் என்ன சொல்ல வேண்டும்? சாம்பியன்ஸ் டிராபியில் அவர்கள் எவ்வாறு செயல்பட்டார்கள் என்பதை உலகம் பார்த்தது."என்று அவர் கூறினார்.