ஆஸ்திரேலியா ஓப்பன் டென்னிஸ் போட்டி, மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த ஆட்டத்தில், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை டயானா யஸ்ட்ரெம்ஸ்கா, அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸை எதிர்க்கொண்டார். இந்தப்போட்டில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய செரினா, 6-2 , 6-1 என்ற நேர்செட் கணக்கில் வெற்றிபெற்றார்.
18 வயதேயான உக்ரைன் வீராங்கனை டயானாவுக்கு இந்தத் தோல்வியை தாங்கிக்கொள்ள முடியவில்லை. தோல்வியால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், ஆட்டம் முடிந்தவுடன் செரினாவுக்கு கைகொடுக்கும்போது அழுதுவிட்டார்.
அவர் அழுவதைக் எதிர்முனையில் நின்றுக் கொண்டிருந்த செரினா கவனித்தார். உடனடியாக அந்த வீராங்கனை அருகில் அந்த செரினா, அவரை தழுவிக்கொண்டு, அவர் முதுகை தட்டிக்கொடுத்துத் தேற்றினார். அப்போது அவர், "நீ நன்றாக விளையாடினாய். உனக்கு இன்னும் வயது இருக்கிறது. உண்மையில் உன்னுடைய ஆட்டம் சிறப்பாக இருந்தது, அழாதே" என்றார்.
செரினா வில்லியம்ஸை பொறுத்தவரை ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியா ஓப்பன் டென்னிஸில் 7 பதக்கங்களையும், ஃப்ரெஞ்ச் ஓப்பன் டென்னிஸில் 3 பதக்கங்கள், விம்பிள்டன் 7, அமெரிக்க ஓப்பன் 6 என மொத்தம் 23-க்கும் மேற்பட்ட பதக்கங்களைப் பெற்ற வீராங்கனை. இதில், இரட்டையர் பிரிவு வேறு. இப்படியொரு சீனியர் வீராங்கனையின் வார்த்தைகள், எதிரணியைச் சேர்ந்த உக்ரைன் வீராங்கனைக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பேசிய செரினா வில்லியம்ஸ், "அவரது அணுகுமுறை எனக்குப் பிடித்திருந்தது. அவர் வெறுமனே விளையாட மட்டும் வரவில்லை. வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் வந்துள்ளார். அதுதான் அவரது மனதைப் பெரிதும் பாதித்துள்ளது. அவரிடம் திறமை உள்ளது' என்றார். அதேபோல, உக்ரைன் வீராங்கனை டயான பேசுகையில், 'லெஜன்ட் ஒருவரிடமிருந்து இதுபோன்ற வார்த்தைகளைக் கேட்கும்போது என்னுடைய சோகத்தை மறந்துவிட்டேன்' என்றார் நெகிழ்ச்சியாக.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க ஒப்பன் டென்னிஸ் போட்டியில், நடுவரிடம் ஏற்பட்ட மோதலின் போது அவரைப் பார்த்து, "நீ என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இனியொருமுறை நீ உயிருடன் வாழும் வரை, நான் இருக்கும் எந்த கோர்ட்டிலும் நீ இருக்கக் கூடாது" என ஆவேசமாக டென்னிஸ் பேட்டை கீழே வீசிய ஆக்ரோஷ செரினாவுக்குள் இப்படியொரு பக்குவமான குணமா என்று ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.