செரீனா வில்லியம்ஸ் : கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற பெண்களுக்கான இறுதிப்போட்டியில் 6-2, 6-4 எனும் நேர் செட்டில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சை வீழ்த்தி, ஜப்பானின் நவோமி ஒசாகா வெற்றி பெற்றார். இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் ஜப்பானியர் எனும் பெருமை பெற்றுள்ளார் ஒசாகா.
முதல் செட்டை செரீனா இழந்த நிலையில், இரண்டாவது செட்டின் துவக்கத்தின் போது, தனது பயிற்சியாளரிடம் இருந்து செரீனா அறிவுரை பெற்றதாக கூறி, செரீனாவை கள நடுவர் கார்லஸ் ராமோஸ் எச்சரித்தார்.
அதற்கு அப்போதே பதிலளித்த செரீனா, 'எனது பயிற்சியாளர் கைகளால் வெற்றி பெறு என என்னை நோக்கி தம்ஸ் அப் மட்டுமே காட்டினார். ஏமாற்றி வெற்றி பெறுவதற்கு பதில் நான் தோற்றுவிட்டே செல்வேன்' என பதிலளித்தார். ஆனால், அதை நடுவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதைத் தொடர்ந்து, இரண்டாவது செட்டில் செரீனாவின் செர்வ்களை முறியடித்து, 3-1 ஒசாகா முன்னிலை பெற, ஆத்திரமடைந்த செரீனா, பேட்டை ஓங்கி தரையில் அடித்து கோபத்தை வெளிப்படுத்தினார். இது மீண்டும் விதிமீறலாகி, ஆட்டத்தில் செரீனாவின் புள்ளி குறைக்கப்பட்டது.
இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற செரீனா, நடுவரை பார்த்து, 'என்னிடம் இருந்து புள்ளியை திருடிவிட்டாய். நீ ஒரு திருடன். எனது வாழ்க்கையில் நான் யாரையும் ஏமாற்றியதில்லை. எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள். அவளுக்கு என்ன வேண்டுமோ அதை பெற்றுத் தருவதில் நான் துணை நிற்பேன். நான் ஏமாற்றவேயில்லை. நீ என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இனியொருமுறை நீ உயிருடன் வாழும் வரை, நான் இருக்கும் எந்த கோர்ட்டிலும் நீ இருக்கக் கூடாது' என்று ஆவேசமாக கத்தினார்.
இதைத்தொடர்ந்து அவர் மைதானத்திலேயே கடினமான வார்த்தைகளை பயன்படுத்த அவரை அமெரிக்க ஓபன் டென்னிஸ் அதிகாரிகள் வந்து சமாதானப்படுத்தினர்.
இந்த சர்ச்சைகளுக்கு பிறகு இரண்டாவது செட்டை தொடர்ந்த செரினா 6-4 என ஒசாகாவிடம் பறிகொடுத்தார்.
தனது முன்மாதிரி செரினா தான் என அடிக்கடி கூறிய ஒசாகா, தற்போது அதே செரினாவை வீழ்த்தி கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை தட்டிச்சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.