Shaheen Shah Afridi Tamil News: இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர் போல் இங்கிலாந்து மண்ணில் விடாலிட்டி பிளாஸ்ட் டி20 தொடர் நடந்து வருகிறது. 18 அணிகள் இரண்டு குழுக்களாக (சவுத் மற்றும் நார்த்) பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று நார்த் குரூப் பிரிவில் உள்ள நாட்டிங்ஹாம்ஷயர் மற்றும் வார்விக்ஷயர் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வார்விக்ஷயர் அணியின் கேப்டன் அலெக்ஸ் டேவிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி, முதலில் பேட்டிங் செய்த நாட்டிங்ஹாம்ஷயர் 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 168 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டாம் மூர்ஸ் 73 ரன்கள் எடுத்தார். வார்விக்ஷயர் அணி தரப்பில் ஹசன் அலி மற்றும் லிண்டொட் தலா 3 விக்கெட்களும், மேக்ஸ்வெல் 2 விக்கெட்களும் கைப்பற்றி இருந்தனர்.
இதனையடுத்து, 169 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய வார்விக்ஷயர் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்களாக அலெக்ஸ் டேவிஸ் - ராபர்ட் யேட்ஸ் ஜோடியில், அலெக்ஸ் டேவிஸ் நாட்டிங்ஹாம்ஷயர் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி வீசிய முதல் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார். அடுத்து வந்த கிறிஸ் பெஞ்சமின் 2வது பந்தை எதிகொண்ட நிலையில், ஸ்கூப் ஷாட் ஆட முயன்று போல்ட் அவுட் ஆனார்.
2 பந்துகள் தாக்குபிடித்த டான் மௌஸ்லி ஷாஹீன் அப்ரிடி வீசிய 5வது பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன்பிறகு வந்த எட் பர்னார்ட் போல்ட் அவுட் ஆகி வந்த வேகத்தில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதன்மூலம், ஷாஹீன் அப்ரிடி ஒரு ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாறு படைத்தார். முதல் ஓவரிலேயே ஷாஹீன் இந்த சாதனையை செய்து அசத்தி இருந்தார்.
ஷாஹீன் அப்ரிடி இந்த ஆட்டத்தில் 7.20 என்ற எகானமியுடன் 4 ஓவர்களில் 29 ரன்களை விட்டுகொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், இந்த போட்டியில் ஒரு மெய்டன் ஓவரை வீசி அசத்தி இருந்தார்.
பாக்,. அணியின் துருப்புச் சீட்டு
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏ.சி.சி) நடத்தும் ஆசிய கோப்பை போட்டிகள் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17, வரை பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5 முதல் நவம்பர் 23 வரை இந்தியாவில் நடக்கிறது. இந்நிலையில், ஷாஹீன் அப்ரிடி பாகிஸ்தான் அணியின் மிக முக்கிய பந்துவீச்சாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் டாப் ஆடரை கலங்கடித்தவர் ஷாஹீன் அப்ரிடி என்பது குறிப்பித்தக்கது.
அப்ரிடி அணி தோல்வி
ஆட்டத்தின் தொடக்கத்தில் விக்கெட் சரிவை சந்தித்தாலும், மற்றொரு தொடக்க வீரரான ராபர்ட் யேட்ஸ் தனது மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் விளாசிய அவர் 65 ரன்கள் குவித்து அணி வெற்றி பெற்ற சிறப்பாக பங்களித்தார். வார்விக்ஷயர் அணி 19.1 ஓவரிலே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டிப்பிடித்தது. இறுதியில், நாட்டிங்ஹாம்ஷயர் அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வார்விக்ஷயர் அணி வீழ்த்தி அசத்தியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil