shahid afridi, afridi, india vs pakistan, ஷாகித் அப்ரிடி, கிரிக்கெட் செய்திகள், விளையாட்டு செய்திகள், ind vs pak, cricket news, india pakistan cricket, ind pak cricket
பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஷாஹித் அப்ரிடிக்கு என்று இந்தியாவில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால், மனுஷன் இன்னைக்கு ஒன்று, நாளைக்கு ஒன்று வாய்த் தவறி (?), அல்லது வாய் குழறி (?) எதையாவது உளறி வைக்க, இந்திய ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அப்படி பத்தோடு பதினொன்றாக இச்சம்பவம் அமைந்துள்ளது.
Advertisment
அதாவது, பாகிஸ்தானுடன் தோற்கும் போது இந்திய வீரர்கள் மன்னிப்புக் கேட்காத குறைதான். இந்திய அணியை நாங்கள் ஏகப்பட்ட முறை சரணடைய வைத்திருக்கிறோம்" என்று சீண்டியிருக்கிறார் அப்ரிடி.
இதுகுறித்து, யூடியூபில் 'Cric Cast' எனும் ஷோவில் பேசிய அப்ரிடி, "நான் எப்போதும் இந்தியாவுடன் விளையாடுவதை ரசித்திருக்கிறேன். நாங்கள் அவர்களை நிறைய முறை வீழ்த்தியுள்ளோம். இந்திய அணியை நாங்கள் தான் அதிக முறை வீழ்த்தியுள்ளோம் என்று நம்புகிறேன், போட்டியின் பின்னர் அவர்கள் எங்களிடம் மன்னிப்பு கேட்காத குறை தான்" என்று சற்று தூக்கலாகவே காரத்தை சேர்த்து இந்திய ரசிகர்களை வம்புக்கு இழுத்திருக்கிறார்.
"இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான் நிறைய விளையாடியுள்ளேன். இந்த அணிகளுக்கு எதிராக ஆடும் போது உங்களுக்கு அதிக அழுத்தம் இருக்கும். ஏனெனில், அவை நல்ல அணிகள், சிறந்த அணிகள். அவர்களின் இடங்களுக்கு சென்று விளையாடுவது என்பது பெரிய விஷயம்" என்று அவர் மேலும் கூறினார்.
புள்ளிவிவர ரீதியாக ஷாகித் அப்ரீடி கூறுவது சரிதான், டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் 59 முறை மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் 12 முறை வெல்ல, இந்திய அணி 9 முறைதான் வென்றுள்ளது. 50 ஒவர் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் பாகிஸ்தான் 73 போட்டிகளில் வெல்ல இந்திய அணி 55 போட்டிகளில்தான் இதுவரை வென்றுள்ளது.
டி20 கிரிக்கெட்டில் மட்டும் இந்திய அணி 8 போட்டிகளில் பாகிஸ்தானை 6 முறை வீழ்த்தியுள்ளது.
அதேசமயம், இந்திய ரசிகர்களிடமிருந்து பெற்ற அன்பிற்கு நன்றி தெரிவித்த அப்ரிடி, “எனது மறக்க முடியாத இன்னிங்ஸ் இந்தியாவுக்கு எதிராக அடித்த 141 ரன்கள் ஆகும், அதுவும் இந்தியாவில் தான். நான் அந்த பயணத்தில் முதலில் செல்வதாக இல்லை. என்னை அழைத்தும் செல்லவில்லை. அந்த நேரத்தில் வாசிம் பாய் மற்றும் தலைமை தேர்வாளர் எனக்கு நிறைய ஆதரவளித்தனர். அது மிகவும் கடினமான சுற்றுப்பயணம், அந்த இன்னிங்ஸ் எனக்கு மிகவும் முக்கியமானது.
இந்திய ரசிகர்கள் என்னை நேசிப்பவர்கள் என்று 2016-ல் கூறினேன் அதிலிருந்து நான் மாறவில்லை. நான் சிலதைக் கூறுவேன் பிறகு அதற்கு மன்னிப்பும் கேட்பேன். தவறாகப் பேசினால் மன்னிப்புக் கேட்கும் பெரிய இதயத்தை எனக்கு அல்லா அளித்துள்ளார்" என்றார்.
முன்னதாக, பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதிக்குச் சமீபத்தில் சென்ற ஷாகித் அப்ரிடி, “உலகமே கொரோனா எனும் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது, இதை விட மோசமானது மோடியின் மனமும் இதயமும். காஷ்மீரில் 7 லட்சம் ராணுவத்தினரை குவித்துள்ளார்” என்று பேச, யுவராஜ், கம்பீர், ஹர்பஜன் உட்பட இந்திய வீரர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”