ஐ.பி.எல் தொடரில் நேற்று (மே 3) பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்ததற்கு, தான் பொறுப்பேற்றுக் கொள்வதாக சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
17-வது ஓவரில் 20 பந்துகளில் 42 ரன்கள் தேவை என்ற நிலை இருந்த போது, பேட்டிங் செய்வதற்காக தோனி களமிறங்கினார். 8 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே எடுத்த தோனி, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல தவறினார்.
"நான் பேட்டிங் செய்யத் தொடங்கிய போது, தேவையான ரன்களை பெற அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் எனது ஆட்டத்தை நான் மாற்றி இருக்க வேண்டும். எனவே, இந்த தோல்விக்கு நான் பெறுப்பேற்றுக் கொள்கிறேன்" என்று தோனி தெரிவித்தார்.
ஆர்.சி.பி தனது ஆட்டத்தை தொடங்கியதில் இருந்து புத்திசாலித்தனமாக விளையாடியது. அணியின் தொடக்க வீரர்கள் ஜேக்கப் பெத்தேல் மற்றும் விராட் கோலி இருவரும் அரைசதங்களை அடித்தனர். கடைசி 14 பந்துகளில் ரொமாரியோ ஷெப்பர்டின் அபார ஆட்டத்தால் ஆர்.சி.பி 213 ரன்கள் குவித்தது.
"ஆர்.சி.பி நல்ல தொடக்கத்தை அளித்தனர். ஆனால், இடைப்பட்ட ஓவர்களில் அவர்களின் ரன்களை கட்டுப்படுத்தினோம். எனினும், கடைசி ஓவர்களில் ரொமாரியோ ஷெப்பர்ட் சிறப்பாக ஆடினார். எங்கள் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினாலும், அவர்கள் அதிகமாக ரன்களை குவித்தனர்" என்று தோனி கூறினார். மேலும், சி.எஸ்.கே பவுலர்கள் அதிகமாக யார்க்கர் வீச வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்த சீசனில் 11 ஆட்டங்களில் விளையாடிய சி.எஸ்.கே அணி, 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.