இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்த தொடருக்கான தொடக்கப் போட்டி வருகிற ஜூன் 20 முதல் ஹெடிங்லி லீட்ஸ் நகரில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு, புதிய கேப்டனை நியமிக்க தேர்வாளர்கள் முடிவு செய்துள்ளனர். அவர்களின் இந்த முடிவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ) ஆதரவு தெரிவிக்கும் என 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டது.
இந்த நிலையில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா அறிவித்துள்ளார். ஏற்கனவே சர்வேதேச டி20 போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றுள்ள அவர், ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாட உள்ளதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "அனைவருக்கும் வணக்கம், நான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்பதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வெள்ளை நிற உடையில் எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவது முழுமையான மரியாதை. பல ஆண்டுகளாக நீங்கள் காட்டிய அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி," என்று குறிப்பிட்டு இந்திய அணி டெஸ்ட் தொப்பியின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Shubman Gill frontrunner for India Test captaincy after Rohit Sharma steps down
ரோகித் சர்மா பதவி விலகியதை அடுத்து, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவிக்கு சுப்மன் கில் முன்னிலை வகிக்கிறார். இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அஜித் அகர்கர் தலைமையிலான சீனியர் தேர்வுக் குழு, டெஸ்ட் கேப்டனாகப் பொறுப்பேற்க 25 வயதான கில் தான் சரியானவர் என்று கருதுகிறது என்பதை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் புரிந்துகொள்கிறது. இருப்பினும், தேர்வுக்குழுவினர் முறையான அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு பி.சி.சி.ஐ-யுடன் இது குறித்து விவாதிப்பார்கள் எனத் தெரிகிறது. டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டால், கில்லின் முதல் பணி இங்கிலாந்தில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக இருக்கும்.
/indian-express-tamil/media/post_attachments/2025/05/SHUBMAN-GILL-VS-NZ-MUMBAI-AMIT-CHAKRAVARTHY-506362.jpg?w=640)
முன்னதாக, இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளரும், துணை கேப்டனான ஜஸ்பிரித் பும்ராவுக்கு இங்கிலாந்து தொடரில் துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட மாட்டாது என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்திருந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது, இரண்டு டெஸ்ட் போட்டிகளில் முன்னிலை வகித்ததைத் தவிர, இந்திய அணிக்கு ஒரே டெஸ்ட் வெற்றியை பெற்றுத் தந்தவர் பும்ரா. ஆனால், அவர் இங்கிலாந்தில் நடைபெறும் ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் இடம்பெற வாய்ப்பில்லை என்பதால், அவரது பணிச்சுமை மேலாண்மை காரணமாக, தேர்வாளர்கள் வேறு விருப்பத்தை தேடி வருகிறார்கள்.
"ஐந்து டெஸ்ட் போட்டிகளுக்கும் தயாராக இருக்கும் ஒரு வீரர் எங்களுக்கு வேண்டும், அவருக்கு (பும்ரா) துணை கேப்டன் பதவி வழங்கப்பட வேண்டும்" என்று பி.சி.சி.ஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம், தேர்வாளர்கள் எதிர்கால கேப்டன் ஒருவரை உருவாக்க வேண்டும் என்றும், புதிய டெஸ்ட் சுழற்சியுடன், தேர்வுக் குழு இந்திய அணியில் நீண்டகால கேப்டனை தேடுகிறார்கள் என்றும் தெரிகிறது. மேலும் கில் அதற்குப் பொருந்துகிறார்.