இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்த தொடருக்கான தொடக்கப் போட்டி வருகிற ஜூன் 20 முதல் ஹெடிங்லி லீட்ஸ் நகரில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கு முன்னதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Shubhman Gill named India’s new Test captain
இதனால், இங்கிலாந்து தொடரில் அவர்களுக்கு பதிலாக யார் இறங்குவார்கள் என்பது பற்றியும், புதிய டெஸ்ட் கேப்டன் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ. இன்று அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இந்திய சீனியர் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் வெளியிட்டார். இதன்படி, இங்கிலாந்து செல்லும் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், இதன் மூலம் இந்திய டெஸ்ட் அணியின் 37-வது கேப்டன் ஆனார். இந்த வார தொடக்கத்தில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது போல, வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இங்கிலாந்து தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். குறிப்பாக வேகப்பந்து வீச்சு கூட்டாளியான ஜஸ்பிரித் பும்ராவும் ஐந்து டெஸ்ட் போட்டிகளுக்கும் கிடைக்காததால், அவரது பணிச்சுமையை கையாளும் திறன் குறித்து தேர்வாளர்களுக்கு உறுதியாக தெரியவில்லை.
இங்கிலாந்து தொடருக்கான அணியில் சர்பராஸ் கான், முகமது ஷமி, ஹர்ஷித் ராணா, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம்பெறவில்லை. 2021 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது மயங்க் அகர்வாலுக்குப் பதிலாக ரிசர்வ் தொடக்க வீரராக இருந்த 29 வயதான அபிமன்யு ஈஸ்வரன் தற்போது கில் தலைமையிலான அணியில் இடம் பெற்றுள்ளார். அவர் இந்தத் தொடரில் அறிமுகமாகலாம்.
இந்திய அணிக்காக முதல் முறையாக அறிமுக வீரராக களம் காண காத்திருக்கும் மற்றொரு வீரர் சாய் சுதர்சன். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது முதல் தர அறிமுகப் போட்டியில் சதம் அடித்ததிலிருந்து தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து இன்னிங்ஸைத் தொடங்க கே.எல். ராகுலுடன் சுதர்சனும் ஈஸ்வரனும் போட்டியிடுவார்கள். கேப்டனாக கில் எடுக்க வேண்டிய முதல் முக்கிய முடிவுகளில் இதுவும் ஒன்று.
இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி:-
சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன்/விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல் ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரிட் பி. சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ்தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.