ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. தற்போது பெர்த்தில் உள்ள வெஸ்ட் ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கத்தின் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. முதலில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்து இந்திய வீரர்கள், தற்போது இரண்டு பிரிவுகளாக பிரிந்து பயிற்சிப் போட்டியில் ஆடி வருகின்றனர்.
கில் விலகல்
இந்த நிலையில், இந்திய டெஸ்ட் அணிக்கு அடுத்த பின்னடைவாக, வருகிற வெள்ளிக்கிழமை முதல் பெர்த்தில் தொடங்கும் பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்டில் இருந்து டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன் சுப்மன் கில் விலகியுள்ளார். இன்று சனிக்கிழமை நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்ற நிலையில், பீல்டிங் செய்து கொண்டிருந்த போது அவரது கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. அந்த காயத்தை ஸ்கேன் செய்து பார்த்த போது, கட்டை விரல் எலும்பு முறிந்து இருப்பது தெரியவந்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Shubman Gill ruled out of first Test match in Perth because of fractured thumb
“அவரது கட்டை விரல் நன்றாக இல்லை. ஸ்கேன் செய்து பார்த்தோம், எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் குணமடைய குறைந்தது இரண்டு வாரங்கள் ஆகும். எனவே, முதல் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடமாட்டார். முதல் மற்றும் இரண்டாவது டெஸ்டுக்கு இடையே பெரிய இடைவெளி இருப்பதால், இரண்டாவது டெஸ்டில் அவர் குணமடைவார் என்று நாங்கள் நம்புகிறோம், ”என்று பி.சி.சி.ஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய பயிற்சி ஆட்டத்தின் போது கே.எல் ராகுலுக்கு காயம் ஏற்பட்டது. அவர் காயத்தோடு ஆடினாலும், காயத்தால் ஏற்பட்ட வலியை தாங்க முடியாமல் வெளியேறினார். இதேபோல், பயிற்சி போட்டிக்கு முன்பு ஏற்பட்ட மர்ம காயத்திற்காக முன்னணி வீரரான விராட் கோலி ஸ்கேன் எடுக்க சென்றார். இந்த சூழலில் தற்போது கில்லுக்கு காயம் ஏற்பட்டு இருப்பது இந்திய வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, முழுங்கை காயம் காரணமாக அவதியுற்ற ராகுல் ஞாயிற்றுக்கிழமை காலை தனது பேட்டிங்கை மீண்டும் தொடங்குவார் என்றும், முதல் டெஸ்டில் விளையாட அவர் உடல் தகுதியுடன் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கில் விலகி இருக்கும் நிலையில், முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் கேப்டன் ரோகித் ஆஸ்திரேலியா செல்லாவிட்டால் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜூரல் அணிக்குள் வர வாய்ப்புள்ளது. மெல்போர்னில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் ஜூரல் 80 மற்றும் 68 ரன்கள் எடுத்தார். மேலும், தரமான ஃபார்மில் இருக்கும் அவரால் முழுநேர பேட்ஸ்மேனாக விளையாட முடியும். விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் இருப்பார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“