Siechem Madurai Panthers vs Lyca Kovai Kings, 24th Match Tamil News: டி.என்.பி.எல் கிரிக்கெட் லீக் போட்டியில், மதுரை - கோவை அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டத்தில், கோவை அணி 44 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
8 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி தமிழகத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை லைக்கா கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய 3 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. எஞ்சிய ஒரு இடத்துக்கு மதுரை பாந்தர்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் ஆகிய அணிகளுக்கு டையே போட்டி நிலவி வருகிறது. பால்சி திருச்சி அணி ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது.
இந்நிலையில், டி.என்.பி.எல் 24வது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ், லைக்கா கோவை கிங்ஸ் அணிகள் மோதியது.
டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து லைக்கா கோவை கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது.
கோவை அணியின் தொடக்க ஆட்டக்காரகளாக களம் இறங்கிய சுஜய் 4 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து சுரேஷ் குமார் உடன் சச்சின் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அபாரமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. அதிரடியாக ஆடிய சச்சின் அரைசதம் அடித்தார். அவர் 64 ரன்னிலும், இதையடுத்து களம் இறங்கிய முகிலேஷ் 11 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து சச்சினுடன் கேப்டன் ஷாரூக் கான் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய ஷாருக் மற்றும் சச்சின் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். அதிரடியாக ஷாரூக் கான் 53 ரன் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இறுதியில் லைக்கா கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 208 ரன்களே சேர்த்தது. லைக்கா கோவை கிங்ஸ் அணி தரப்பில் சுரேஷ் குமார், சச்சின், ஹாரூக் கான் ஆகிய மூவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.
இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் அணி ஆடியது. மதுரை அணியில் தொடக்க ஆட்டக்காரகளாக வாஷிங்டன் சுந்தர், லோகேஷ்வர் ஆகியோர் களம் இரங்கினர்.
இதில் சுந்தர் 14 ரன்னிலும், லோகேஷ்வர் 41 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய கேப்டன் ஹரி நிஷாந்த் 33 ரன், ஜெகதீசன் கெளசிக் 9 ரன், தீபன் லிங்கேஷ் 14 ரன், அபிஷேக் 17 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இறுதியில் மதுரை அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 164 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து கோவை அணி 44 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கோவை அணி தரப்பில் மணிமாறன் சித்தார்த் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் கோவை அணி முதல் குவாலிபையர் ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil