#Metoo என்ற ஹேஷ்டேக் மூலம், பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அதை செய்தவர் யார் என்பது குறித்தும் ரகசியங்களை வெளியிட்டு வருகின்றனர்.
குறிப்பாக, பாடகி சின்மயி இதில் மிகத் தீவிரமாக இயங்கி வருகிறார். கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பகிரங்கமாக அவர் சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளித்த வைரமுத்து, 'அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.' என்றார்.
உடனே இதற்கு மறுப்பு தெரிவித்த சின்மயி, வைரமுத்துவை 'பொய்யர்' என்று குறிப்பிட்டிருந்தார்.
பல துறைகளைச் சார்ந்த பெண்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லை சம்பவங்களையும், பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பாக, சின்மயி தனது ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்.
அப்படியொரு பாலியல் குற்றச்சாட்டை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரும், மும்பை இந்தியன்ஸ் வீரருமான லசித் மலிங்கா மீது சின்மயி முன்வைத்திருக்கிறார்.
ஒரு பெண் பத்திரிக்கையாளருக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை அது என்று சின்மயி கூறியிருக்கிறார்.
இதுகுறித்து, சின்மயி தனது பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது, "சில வருடங்களுக்கு முன்பு, மும்பையில் எனது தோழியுடன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு நான் சென்ற போது, எனது தோழி அங்கு இல்லை. அப்போது லசித் மலிங்கா அவரது அறையில் என் தோழி இருப்பதாக கூறினார். நான் உள்ளே சென்றேன். அவர் என்னை படுக்கையில் தள்ளினார். உடனே சுதாரித்துக் கொண்ட நான் என் முகத்தையும் வாயையும் மூடிக் கொண்டேன். ஆனால், அவர் என் முகத்தை பயன்படுத்திக் கொண்டார்." என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இந்த புகாருக்கும் சரி... சின்மயி வைரமுத்து மீது கூறும் புகாருக்கும் சரி... அவர்களிடம் ஆதாரம் இருக்கிறதா? என்று தெரியவில்லை. புகார் சொல்லும் எந்தப் பெண்ணும் இதுவரை ஆதாரத்தை வெளியிடவில்லை.