/indian-express-tamil/media/media_files/OIkPCjOQfZ27uTZSv5D0.jpeg)
தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் ஸ்கேட்டிங் போட்டிகளை சேர்க்க தமிழக விளையாட்டு துறை அமைச்சர் முன் வரவேண்டும் என ஸ்கேட்டிங் பயிற்சியாளர்கள் மற்றும் ஸ்கேட்டிங் வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவையில் நடைபெற்ற சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கான தென் மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் நான்கு மாநிலங்களை சேர்ந்த சி.பி.எஸ்.இ பள்ளி மாணவ, மாணவிகள் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
கோவையில் முதல் மண்டல தென்மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2024 போட்டி கோவை சோமையம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்வஸ்திகா ஸ்கேட்டிங் மைதானத்தில் நடைபெற்றது.
சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையேயான இந்த போட்டியை கோவை அத்யாயனா சர்வதேச பப்ளிக் பள்ளி ஒருங்கிணைத்தது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, புதுவை என நான்கு மாநிலங்களில் இருந்தும் சுமார் 800க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்தும் 3000க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்.
ஐந்து நாட்கள் நடைபெற உள்ள இதில் ஐந்து வயது முதல் 19 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இன்லைன், க்வாட் என இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆர்வத்துடன் பங்கேற்ற போட்டியாளர்கள் ரோலர் ஸ்கேட்டிங் ஷூ அணிந்தபடி சீறி பாய்ந்தனர்.
போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கூறுகையில் தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் ஸ்கேட்டிங் போட்டிகளை சேர்க்க தமிழக விளையாட்டு துறை அமைச்சர் முன் வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
முன்னதாக பயிற்சியாளர்கள் கூறுகையில், தற்போது ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டில் அதிக மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டி வருவதாகவும், வரும் ஆண்டுகளில் தமிழக வீரர், வீராங்கனைகள் தேசிய, சர்வதேச அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் பதக்கங்கள் பெற்று சாதனை படைப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தனர்.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.