Sourav Ganguly Press meet: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சவுரவ் கங்குலி, அவர் இந்திய கிரிக்கெட் அணியை வழி நடத்தியது போலவே கிரிக்கெட் அமைப்பையும் வழிநடத்துவார் என்றும் நிறுவனத்தின் நம்பகத் தன்மையில் சமரசம் செய்ய மாட்டேன் என்றும் உறுதியளித்தார்.
இது குறித்து கங்குலி கூறுகையில், “நான் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தியது போலவே ஊழல் இல்லாமல் நம்பகத்தன்மையுடன் பிசிசிஐ அமைப்பை வழிநடத்துவேன்” என்று கூறினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, இந்த பொறுப்பை ஏற்றுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது ஒரு கௌரவம் என்றும் இது இந்திய கிரிக்கெட் அமைப்பின் புதிய தொடக்கம் என்றும் கூறினார்.
மேலும், “நான் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் இருக்கிறேன். அது சவாலானது” என்றும் அவர் கூறினார்.
மும்பையில் புதன்கிழமை நடைபெற்ற வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் கங்குலி அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் இந்திய கிரிக்கெட் அமைப்பின் 39வது தலைவராக உள்ளார். இதன் மூலம், இந்த பதவியை வகிக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் இரண்டாவது கேப்டன் ஆவார். 47 வயதான முன்னாள் கேப்டன் கங்குலி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருடைய பதவிக்கு ஒன்பது மாத கால அவகாசம் உள்ளது.
பி.சி.சி.ஐ.யில் தனது முன்னுரிமைகள் குறித்து பேசிய கங்குலி, தற்போதைய இந்திய கேப்டன் விராட் கோலியுடன் வியாழக்கிழமை பேசுவேன் என்றார்.
கங்குலியிடம் கோஹ்லியுடன் பேசுவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “விராட் கோலி இந்திய கிரிக்கெட்டில் மிக முக்கியமான மனிதர். நாங்கள் அவருடைய கருத்துகளைக் கேட்போம். பரஸ்பர மரியாதை இருக்கும். கருத்துகள் இருக்கும். நான் விராட் கோலியுடன் நாளை பேசுவேன். அவர் என்ன தேவையென்றாலும் சாத்தியமான எல்லா வழிகளிலும் நாங்கள் அவரை ஆதரிப்போம்” என்று கூறினார்.
தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அடங்கிய அணி நிர்வாகத்துடன் தான் இருப்பேன் என்று கங்குலி கூறினார்.
"இது ஒரு சரியான கலந்துரையாடலாக இருக்கும். எல்லாமே பரஸ்பரம் விவாதிக்கப்படும். ஆனால், உறுதியுடன் இருங்கள், நாங்கள் அவர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்காக இங்கு வந்துள்ளோம். அவர்களின் வாழ்க்கையை கடினமாக்கவில்லை. எல்லாமே செயல்திறனின் அடிப்படையில் தான் இருக்கிறது” என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெளிவாக கூறினார்.
முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்த ஊகங்கள் வந்த நிலையில், தோனியின் எதிர்காலம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, கங்குலி “சாம்பியன்கள் மிக விரைவாக முடிக்கமாட்டார்கள். நான் இருக்கும் வரை எல்லோரும் மதிக்கப்படுவார்கள்” என்றார்.
கங்குலி இந்தியா கேப்டனாக இருந்தபோது அணிந்திருந்த உடையை (பிளேஸர்) அணிந்து செய்தியாளர் சந்திப்புக்கு வந்திருந்தார்.
“நான் இந்தியாவின் கேப்டனாக இருந்தபோது இந்த உடயைப் (பிளேஸர்) பெற்றேன். எனவே, இன்று அதை அணிய முடிவு செய்தேன். ஆனால், அது மிகவும் தளர்வாக இருக்கிறது என்பதை நான் உணரவில்லை”என்று கங்குலி சிரித்தபடி கூறினார்.
கங்குலி 2000 ஆம் ஆண்டில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கேப்டனாக இருந்த அவரது பதவிக்காலம் 2005 இல் முடிவடைந்தது. உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் குழுவினர் 33 மாதங்களுக்குப் பிறகு, 47 வயதான கங்குலியை இந்திய கிரிக்கெட்டுக்கு தலைமை தாங்கும் பணியை அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தது. அவர் இந்திய கிரிக்கெட் அமைப்பின் செயல்பாட்டை நிர்வகிக்க நியமிக்கப்பட்டார்.
2017 ஆம் ஆண்டு முதல் கிரிக்கெட் வாரியத்தின் இடைக்காலத் தலைவராக இருந்த சி.கே.கன்னாவை கங்குலி வெற்றி வெற்றிகொண்டு தலைவராக பொறுப்பேற்றார்.