இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருப்பவர் ரிஷப் பண்ட். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் பயங்கரமான கார் விபத்தில் சிக்கினார். அந்த கோர விபத்தில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சாலையில் இருந்த தடுப்பானில் கார் மோதிய விபத்தில் அவரது வலது முழங்காலில் தசைநார் கிழிந்து, நெற்றியில் இரண்டு வெட்டுக்கள் ஏற்பட்டன.
ரிஷப் பண்ட்டுக்கு மும்பையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அந்த தீவிர சிகிச்சைக்குப்பின் உயிர் பிழைத்தார். பின்னர் அவர் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) மறுவாழ்வுக்கு உட்படுத்தப்பட்டார். மெல்ல மெல்ல பேட்டிங் செய்வதற்கு ஏற்ப அவர் உடற்தகுதி பெற்றார்.
இதனையடுத்து, ரிஷப் பண்ட் இந்த ஆண்டில் நடைபெற்று முடிந்த 17-வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்தினார். அவரது தலைமையிலான டெல்லி அணி 14 போட்டிகளில் 7 வெற்றி, 7 தோல்விகளுடன் பிளே - ஆஃப்க்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இந்த சீசனில் தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய பண்ட் 13 போட்டிகளில் 155.40 ஸ்டிரைக் ரேட்டில் 446 ரன்களை எடுத்தார்.
இந்நிலையில், ஐ.பி.எல் தொடரில் கம்பேக் கொடுத்த ரிஷப் பண்ட் வருகிற 19 ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கும் வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் மூலம், ரிஷப் பண்ட் 21 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். அவர் ஆடும் லெவன் அணியில் இடம் பிடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ரிஷப் பண்ட் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளங்குகிறார் என்றும், ஆனால், டி20 ஃபார்மெட்டில் இன்னும் முன்னேற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் கங்குலி பேசுகையில், இந்தியாவின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராக ரிஷப் பண்ட்-டை நான் கருதுகிறேன். அவர் மீண்டும் அணிக்கு திரும்பியதில் எனக்கு ஆச்சரியமில்லை. மேலும் அவர் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடுவார்.
இதே போல் தொடர்ந்து விளையாடினால் அவர் டெஸ்டில் 'ஆல் டைம் கிரேட்' என்கிற பெருமையைப் பெறுவார். என்னைப் பொறுத்தவரை, அவர் டி20 ஃபார்மெட்டில் சிறந்து விளங்க வேண்டும். அவருக்கு இருக்கும் திறமையால், காலப்போக்கில், அவர் சிறந்த வீரர்களில் ஒருவராக மாறுவார் என்று நான் நம்புகிறேன்." என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“