இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் 2வது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 174 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால், இந்திய அணியின் வெற்றிக்கு 147 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆங்கிலத்தில் படிக்க
IND vs NZ: Was Rishabh Pant out or not out? Rohit Sharma unsure why on-field call was overturned, AB de Villiers says ‘always worried about this’
முதல் 43 பந்துகளில் இந்திய அணியின் டாப் 5 பேட்ஸ்மேன்களான கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில், சர்ஃபராஸ் கான், ஜெய்ஸ்வால் ஆகியோர் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இந்திய அணி 29 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் வந்த ரிஷப் பண்ட் ஜடேஜாவை ஒருமுனையில் வைத்து தனது ஸ்டைலில் பவுண்டரிகளை விளாச தொடங்கியது ரசிகர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஜடேஜா 6 ரன்களில் ஆட்டமிழந்தாலும், ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடி 48 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.
இந்திய அணியின் வெற்றிக்கு 55 ரன்கள் தேவையாக இருந்த நிலையில், ரிஷப் பண்ட் - வாஷிங்டன் சுந்தர் இருவரும் ஆட்டத்தை தொடங்கினர். அஜாஸ் படேல் வீசிய பந்தில் ரிஷப் பண்ட் 2 பவுண்டரிகளை விளாசி அசத்தியதையடுத்து நியூசிலாந்து அணி ரிஷப் பண்ட் விக்கெட்டை வீழ்த்த முடிவு செய்தனர்.
அந்த ஓவரின் 4வது பந்தை ரிஷப் பண்ட் டவுன் தி டிராக் இறங்கி வந்து டிஃபென்ஸ் ஆடினார். அந்த பந்து பேடில் உரசி விக்கெட் கீப்பர் பிளெண்டல் கைகளில் விழுந்தது. இதனால் நியூசிலாந்து வீரர்கள் உற்சாகமடைந்து அம்பயரிடம் அவுட் என்று முறையிடவே கள நடுவர் அவுட் இல்லை என்று கைகளை விரித்தார். ரீபிளேவில் பார்க்கும் போது ரிஷப் பண்ட் பேட்டில் பந்து உரசுவது போல் தெரிந்தது. ஆனால் அதே நேரத்தில் ரிஷப் பண்ட் கால்களில் அணிருந்திருந்த பேடிலும் பேட் உரசிய நிலையில் ரிஷப் பண்ட் கால்களில் பேட் உரசுவது தான் ஸ்னிக்கோவில் தெரிவதாக கூறி கொண்டிருந்தார். ஆனால் 3வது நடுவரோ, பந்து பேட்டில் உரசியதாக கூறி அவுட் என்று தீர்ப்பளித்தார். இதனால் ரிஷப் பண்ட் 57 பந்துகளில் ஒரு சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 64 ரன்கள் எடுத்து சோகத்துடன் பெவிலியன் திரும்பினார்.
ஏபி.டிவில்லியர்ஸ் பேசும் பொழுது,ரிஷப் பண்ட் பேட்டில் பந்து பட்டதா இல்லையா? அந்தப் பந்து அவரது பேட்டை தாண்டும்போது ஸ்னிக்கோ மீட்டரில் ஒரு அதிர்வு காணப்பட்டது. ஆனால் அந்த பந்து உறுதியாக பேட்டில் பட்டதா? என்று நமக்குத் தெரியவில்லை. இதுகுறித்து தான் நான் எப்பொழுதும் கவலைப்படுகிறேன். இப்படியான நேரத்தில் ஹாட் ஸ்பாட் தொழில்நுட்பம் எங்கே? என்று கேள்வி கேட்டு விமர்சனம் செய்திருக்கிறார்.