9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகள் கடந்த 19 ஆம் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் துபாயில் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்தத் தொடரில், துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு தொடங்கி நடந்த முதல் அரைஇறுதியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Steve Smith retires from ODIs after Champions Trophy semi-final defeat to India
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 265 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணி 48.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 267 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஸ்மித் ஓய்வு
இந்த நிலையில், ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அரையிறுதியில் இந்தியாவிடம் தோல்வியடைந்ததை அடுத்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக ஸ்மித் போட்டிக்குப் பிறகு சக வீரர்களிடம் கூறியிருக்கிறார். இது தொடர்பாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ள அறிக்கையில், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஸ்மித் தொடர்ந்து விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மித் ஆஸ்திரேலிய அணிக்காக 2010 இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக அறிமுகமானர். இதுவரை 170 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 43.28 சராசரியில் 5800 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 12 சதங்கள் மற்றும் 35 அரை சதங்கள் அடங்கும். மேலும் 34.67 சராசரியில் 28 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் 2015 மற்றும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வென்ற அணிகளில் இடம் பெற்ற ஸ்மித், 2015 இல் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் ஆனார். சாம்பியன்ஸ் டிராபியின் போது காயமடைந்த பேட் கம்மின்ஸ் இல்லாத நிலையில் இடைக்கால கேப்டனாக இருந்தார்.
தனது ஓய்வு குறித்து அவர் பேசுகையில் "இது ஒரு சிறந்த பயணமாக இருந்ததது. ஒவ்வொரு நிமிடத்தையும் நான் விரும்பினேன். எத்தனையோ அற்புதமான காலங்கள் மற்றும் அற்புதமான நினைவுகள் உள்ளன. இரண்டு உலகக் கோப்பைகளை வென்றது, பயணத்தைப் பகிர்ந்து கொண்ட பல அருமையான அணி தோழர்களுடன் சிறந்த சிறப்பம்சமாக இருந்தது. 2027 உலகக் கோப்பைக்கு வீரர்கள் தயாராகத் தொடங்குவதற்கு இப்போது சிறந்த வாய்ப்பு உள்ளது, எனவே இது சரியான நேரம் என்று நான் உணர்கிறேன்.
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்கிறேன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, குளிர்காலத்தில் வெஸ்ட் இண்டீஸ், பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான உள்நாட்டில் நடக்கும் தொடர்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அதில் நான் இன்னும் நிறைய பங்களிக்க வேண்டும் என்று உணர்கிறேன்." என்று ஸ்மித் கூறினார்.
ஸ்மித் 2015 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலிய சிறந்த ஆடவர் ஒருநாள் வீரராகவும், 2015 ஆம் ஆண்டில் ஐ.சி.சி ஆடவர் ஒருநாள் அணியின் வீரராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.