Advertisment

சிறப்பு விமானத்தில் தாயகம் திரும்பும் இந்திய அணி: எப்போது, எங்கே தரையிறங்குகிறது தெரியுமா?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, இந்திய கிரிக்கெட் அணி சொந்த நாடு திரும்புவது குறித்து புதிய அப்டேட் கொடுத்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Stranded Indian cricket team to fly out from Barbados in chartered flight Jay Shah to monitor Tamil News

சிறப்பு விமானம் இந்தியா திரும்புவதில் மேலும் தாமதமாகி வருவதாகவும், இந்திய வீரர்கள் அடங்கிய குழு நாளை வியாழக்கிழமை காலை தலைநகர் டெல்லியில் தரையிறங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. வெஸ்ட் இண்டீசின் பிரிட்ஜ்டவுனில் நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை வென்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, இந்திய அணிக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்துள்ளர்கள். மேலும், அவர்களின் தாயக வருகைக்காகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.  

Advertisment

இந்நிலையில், டி20 உலகக்கோப்பை தொடரில் தென் ஆபிரிக்க அணிக்கு எதிராக இறுதிப் போட்டி நடந்த பார்படாஸ் மற்றும் கரீபியன் தீவுகளில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் அணி தாயகம் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் அனைவரும் தாங்கள் தங்கியிரும் ஓட்டலிலேயே இருந்து வருகிறார்கள். 

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, இந்திய கிரிக்கெட் அணி சொந்த நாடு திரும்புவது குறித்து புதிய அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி, இந்திய அணி வீரர்கள் இன்று புதன்கிழமை மாலை பார்படாஸில் இருந்து டெல்லிக்கு பயணம் செய்ய உள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார். 

“கடவுளுக்கு நன்றி இந்திய அணி இன்று மாலை பார்படாஸில் இருந்து டெல்லிக்கு பறக்கிறது. நாளை மாலை வந்து சேரும். பெரில் புயல் காரணமாக அவர்கள் மூன்று நாட்கள் அங்கேயே சிக்கிக்கொண்டனர். 

பி.சி.சி.ஐ இந்திய வீரர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா அவர்களே முழு நிலைமையையும் கண்காணித்து வருகிறார்”என்று பி.சி.சி.ஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

ஏ.ஐ.சி.24டபிள்யூ.சி - ஏர் இந்தியா சாம்பியன்ஸ் 24 உலகக் கோப்பை என பெயரிடப்பட்ட ஏர் இந்தியா சிறப்பு விமானம், இந்திய அணி, அதன் உதவி ஊழியர்கள், வீரர்களின் குடும்பங்கள் சில வாரிய அதிகாரிகள் மற்றும் இந்திய பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் மீட்டு கொண்டு வர உள்ளது.

எனினும், விமானம் இந்தியா திரும்புவதில் மேலும் தாமதமாகி வருவதாகவும், இந்திய வீரர்கள் அடங்கிய குழு நாளை வியாழக்கிழமை காலை தலைநகர் டெல்லியில் தரையிறங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜூலை 2 ஆம் தேதி அமெரிக்காவின் நியூஜெர்சியில் இருந்து புறப்பட்ட விமானம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் பார்படாஸில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கால அட்டவணையின்படி, விமானம் பார்படாஸில் இருந்து அதிகாலை 4:30 மணிக்கு (உள்ளூர் நேரம்) புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியை அடைய 16 மணி நேரப் பயண நேரம் எடுக்கும். அவர்கள் புறப்படுவதில் மேலும் தாமதம் ஏற்படவில்லை என்றால், இந்திய வீரர்கள் அடங்கிய குழு இந்திய நேரப்படி நாளை வியாழக்கிழமை காலை 6 மணிக்கு தரையிறங்கும். இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவிக்க உள்ளார். ஆனால் அந்த நிகழ்வின் அட்டவணை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. 

இதனிடையே, பார்படாஸில் உள்ள கிரான்ட்லி ஆடம்ஸ் சர்வதேச விமான நிலையம் நேற்று செவ்வாய்கிழமை மீண்டும் இயங்கத் தொடங்கியது. பெரில் புயல் தற்போது 4-வது வகை புயலாக மாறி, 5-வது இடத்தில் இருந்து கீழே நகர்ந்து ஜமைக்காவை நோக்கி நகர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

West Indies Jay Shah T20 World Cup 2024 Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment