Ipl Cricket | Suresh Raina | Chennai Super Kings: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) அணியில் நீண்ட காலமாக விளையாடியவர் முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல். தொடரில் இதுவரை 5 முறை சாம்பியன் பட்டத்தை வாகை சூடியிருக்கிறது. இதேபோல், 2 முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றுள்ளது. இதில், கடந்த ஆண்டு ஐ.பி.எல்.-லில் சென்னை அணி வென்ற பட்டத்தைத் தவிர, மற்ற அனைத்து வெற்றிகளின் போதும், அணிக்கு முக்கிய பங்காற்றி இருந்தார் ரெய்னா. மேலும் அவர் ஐ.பி.எல் தொடரில் ஏரளமான சாதனைகளைப் படைத்துள்ளார். அவற்றில் சிலவை இன்றளவும் முறியடிக்கப்படாமல் உள்ளன.
ரெய்னா விளக்கம்
இந்நிலையில், ஐ.பி.எல் தொடரில் சில அணிகள் இதுவரை சாம்பியன் பட்டம் வெல்லாமல் இருப்பதற்கான காரணம் குறித்து சுரேஷ் ரெய்னா விளக்கியுள்ளார். மேலும், சில அணிகள் நைட் பார்ட்டியில் கலந்து கொள்வதால் தான் அவர்களால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக சுரேஷ் ரெய்னா பேசுகையில், “சென்னை அணி ஒருபோதும் பார்ட்டி செய்தது கிடையாது. அதனால்தான் அவர்கள் மிகவும் வெற்றிகரமான அணியாக திகழ்கிறார்கள். பார்ட்டிகளில் கலந்து கொண்ட 2 முதல் 3 அணிகள் இதுவரை ஐ.பி.எல் தொடரை வெல்லவில்லை." என்று கூறினார்.
ஆ.ர்சி.பி அணியை குறிப்பிடுகிறீர்களா? எனக் கேட்கப்பட்டதற்கு, "இல்லை, வெற்றி பெறாத சில அணிகள் உள்ளன. அவர்கள் பார்ட்டிகளில் மிகப்பெரிய அளவில் கலந்து கொள்கிறார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரையில், நாங்கள் அதைச் செய்தது கிடையாது. அதனால்தான், ஐந்து முறை ஐ.பி.எல் சாம்பியன் பட்டமும், 2 முறை சாம்பியன்ஸ் லீக் டிராபியையும் வென்றுள்ளோம். மும்பை இந்தியன்ஸ் அணியும் 5 முறை கோப்பையை வென்றுள்ளது.
நீங்கள் இரவு நேர பார்ட்டியில் கலந்து கொண்டால், காலையில் உங்களால் எப்படி விளையாட முடியும்?. இரவு முழுவதும் பார்ட்டியில் கலந்து கொண்டால், மே-ஜூன் மாதம் அடிக்கும் வெயிலில் எப்படி மதியம் நடக்கும் போட்டியில் விளையாட முடியும்?.
மொத்த அணியும் நள்ளிரவு பார்ட்டியில் கலந்து கொள்ளக் கூடாது என இருந்தோம். நாங்களும் இந்தியாவுக்காக விளையாடுகிறோம் என்பதையும் எங்கள் மனதில் வைத்துக் கொண்டோம். நான் நன்றாக விளையாடவில்லை என்றால், எனது கேப்டன் என்னை எப்படி தேர்வு செய்வார்? இப்போது, நான் சுதந்திரமாக இருக்கிறேன், நான் ஓய்வு பெற்றுவிட்டேன். இப்போது நான் பார்ட்டி கலந்துகொள்ளலாம்” என்று சுரேஷ் ரெய்னா கூறினார்.
ஐ.பி.எல்.-லில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா, சன் ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் இதுவரை கோப்பை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“