10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Suresh Raina to become CSK batting coach in IPL 2026? Assistant bowling coach responds
இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் இந்தத் தொடரில் இன்னும் 2 ஆட்டங்கள் மீதமுள்ளன. இந்நிலையில், இந்தத் தொடரில், அகமதாபாத்தில் நேற்று மாலை அரங்கேறிய 67-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 230 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பிரெவிஸ் 57 ரன்களும், கான்வே 52 ரன்களும் அடித்தனர். குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் இமாலய இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி 18.3 ஓவர்களில் 147 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் சென்னை 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 41 ரன்கள் அடித்தார். சென்னை தரப்பில் அன்ஜூல் கம்போஜ், நூர் அகமது தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். பிரெவிஸ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்த நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐ.பி.எல் 2025 சீசனின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கடைசி போட்டியின் போது வர்ணனையாளராக இருந்தபோது, முன்னாள் சி.எஸ்.கே வீரரான சுரேஷ் ரெய்னா அடுத்த ஆண்டு அணியுடன் மீண்டும் இணைவது குறித்து சூசகமாக தெரிவித்தார்.
இந்தப் போட்டியின் போது ரெய்னா பேசுகையில், "சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய பயிற்சியாளர் வருவார்" என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட ஆகாஷ் சோப்ரா, "அவர் பெயர் எஸ்-சில் தொடங்குமா?" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ரெய்னா சிரித்துக் கொண்டே, "அவர் இந்த அணிக்காக அதிவேக அரைசதம் விளாசியுள்ளார்" என்று தெரிவித்தார்.
ரெய்னா பேசியது தற்போது சமூக வலைதள பக்கங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக சி.எஸ்.கே-வின் உதவி பந்துவீச்சு பயிற்சியாளர் ஸ்ரீராம் கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி போட்டிக்குப் பிந்தைய பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசுகையில், "எனக்குத் தெரியாது. அவர் அப்படிச் சொன்னாரா? என்று நான் அவரிடம் தான் கேட்க வேண்டும்," என்று சிரித்தபடி ஸ்ரீராம் கூறினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 200 போட்டிகளில் விளையாடி 5529 ரன்களுடன் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ரெய்னா, 2014 ஐ.பி.எல் போட்டியில் 16 பந்துகளில் அந்த அணியின் வேகமான அரைசதம் அடித்தவர் என்ற பெருமையைப் பெற்றார். தற்போது சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக மைக்கேல் ஹஸ்ஸி இருந்து வருகிறார். அவர் 2018 ஆம் ஆண்டு முதல் இந்தப் பதவியை வகித்து வருகிறார் என்பது இங்கு நினைவுகூரத்தது.