Suryakumar Yadav | India Vs South Africa: தென் ஆப்பிரிக்க மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கலந்துகொண்டுள்ளது. இந்த தொடருக்கான முதலாவது டி20 போட்டி டர்பனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடக்க இருந்த நிலையில், பலத்த மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்கிழமை நடந்த 2-வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இந்நிலையில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று (வியாழக்கிழமை) ஜோகன்னஸ்பர்க்கில் இரவு 8.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சதம் விளாசி கேப்டன் சூர்யகுமார் யாதவ் 100 ரன்கள் எடுத்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 60 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 202 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் தென் ஆப்பிரிக்கா 13.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 95 ரன்னுக்கு ஆல் ஆவுட் ஆனது. இதனால், இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி 1-1 என்கிற கணக்கில் தொடரை சமன் செய்தது.
சூர்யகுமார் காயம்
இந்த ஆட்டத்தின் போது வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வீசிய மூன்றாவது ஓவரில் ரீசா ஹென்ட்ரிக்ஸ் அடித்த ஷாட்டை தடுத்து நிறுத்தி பந்தை வீசும்போது சூர்யகுமார் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவரது வலது காலில் பலம் காயம் ஏற்பட்டது போல் வலியால் சூர்யகுமார் துடித்தார்.
பின்னர் அவராகவே பவுண்டரி கோட்டை தாண்டி கீழே குப்புற படுத்த நிலையில், அவரை இந்திய துணை ஊழியர்கள் மற்றும் பிசியோ மைதானத்தில் இருந்து தாங்கியபடி கொண்டு சென்றனர்.
காயம் குறித்து சூர்யகுமார் அப்டேட்
இந்த நிலையில், தனது காயம் குறித்து அப்டேட்டை கேப்டன் சூர்யகுமார் கொடுத்துள்ளார். இந்திய அணியின் வெற்றிக்குப் பிறகான பேட்டியில் அவர் பேசுகையில், “நான் நன்றாக இருக்கிறேன். நன்கு நடக்கிறேன். எப்போதும் ஒரு நல்ல உணர்வு உள்ளது. வெற்றிக்காக என காயம் வரும்போது, அது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது" என்று சூர்யகுமார் கூறினார்.
இந்த போட்டியின் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சூர்யகுமார், 2 டி20 போட்டிகளில் மொத்தமாக 156 குவித்த நிலையில், தொடரின் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“