பிரபல நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் நேற்று(மே.14) இரவு சென்னையில் நடந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னையில் ஷெனாய் நகரைச் சேர்ந்தவர் டாக்டர் பத்ரிநாத். இவரது மகன் பாலகிருஷ்ணன்(29). பிரபல நீச்சல் வீரர். தேசிய மற்றும் மாநில அளவிலான நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வாங்கியுள்ளார். கடந்த 2010ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீச்சல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.
கிண்டி பொறியியல் கல்லூரியில் பயின்ற பாலகிருஷ்ணன் அமெரிக்காவில் எம்எஸ் பட்டம் பெற்று அங்கேயே வேலைப் பார்த்து வந்தார்.
இந்நிலையில், விடுமுறையைக் கழிக்க சமீபத்தில் சென்னை வந்த பாலகிருஷ்ணன், நேற்று(மே.14) இரவு தனது தோழியுடன் அரும்பாக்கம் வழியாக இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி் கொண்டிருந்தார். அப்போது லாரியை முந்த முயற்சித்துள்ளார். அப்போது, நிலைதடுமாறி லாரிக்கு அடியில் தூக்கி வீசப்பட்டார். இதில் லாரியின் சக்கரத்தில் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அண்ணா நகர் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
போலீசார் அளித்த தகவலின்படி, பாலகிருஷ்ணன் லாரியை முந்த முயன்ற போது, லேசாக லாரி மீது மோதியதில் பேலன்ஸ் தவறி, லாரியின் முன்பக்கத்தில் வலது புறம் விழுந்திருக்கிறார். இதனால், லாரியில் வலது முன் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டார். ஆனால் அவரது தோழி இடது பக்கம் விழுந்ததால் காயமின்றி அவர் உயிர் தப்பினார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2010ம் ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியில் பாலகிருஷ்ணன் கலந்து கொள்ளவிருந்தார். அப்போது, பயிற்சியில் ஈடுபட சென்றுக் கொண்டு இருந்தபோது நான்கு பேர் இவரை வழிமறித்து தாக்கியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போட்டி நடைபெற அப்போது 28 நாட்களே இருந்த நிலையில் இவர் போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை. இவர் மீதான தாக்குதல் அப்போது சந்தேகத்தை எழுப்பி இருந்தது. தற்போது விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பது மேலும் சந்தேகத்தை அதிகரித்து இருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.