T20 World Cup 2022: New rules for Semi Final and Final Tamil News: 8-வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அதன்படி, இந்தத் தொடருக்கான அரையிறுதிப் போட்டிகள் வருகிற நவம்பர் 09 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், நடப்பு டி-20 உலக கோப்பையில் நடக்கவுள்ள அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு புதிய விதியை ஐசிசி அறிமுகம் செய்துள்ளது. பொதுவாக, மழை குறுக்கிட்ட டி20 ஆட்டம் முடிவு பெற, ஆட்டத்தின் இரண்டு இன்னிங்ஸிலும் குறைந்தபட்சம் 5 ஓவர்கள் வீசப்பட வேண்டும். ஆனால், புதிய ஐசிசி விதிகளின்படி, டி-20 உலக கோப்பையில் அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டத்தில் ஒரு போட்டிக்கு இரண்டு இன்னிங்ஸிலும் குறைந்தபட்சம் 10 ஓவர்கள் வீசப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை, போட்டி நாளில் குறைந்தபட்சம் 10 ஓவர்கள் என்ற நிபந்தனையை அணி எதிர்கொள்ளவில்லை என்றால், போட்டியின் முடிவு எப்படி அறிவிக்கப்படும்? மற்றும் டி20 உலகக் கோப்பையின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு ஐசிசி என்ன மாற்றத்தை செய்துள்ளது? என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
T20 WC 2022: நாக் அவுட் போட்டிகளின் அட்டவணை:
அரையிறுதி 1: சிட்னி, 9 நவம்பர் (1:30 PM IST)
அரையிறுதி 2: அடிலெய்டு, 10 நவம்பர் (1:30 PM IST)
இறுதிப் போட்டி: மெல்போர்ன், 13 நவம்பர் (1:30 PM IST)
இப்போது, எந்த அணியும் 10 ஓவர்களுக்கும் குறைவாக எதிர்கொள்ளும் முன் போட்டி நாள் கைவிட்டப்பட்டால், ஆட்டத்தின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு குறிப்பாக ஒதுக்கப்பட்ட ரிசர்வ் நாளில் அதே கட்டத்தில் போட்டி மீண்டும் தொடங்கப்படும்.
ரிசர்வ் நாளிலும் அணிகள் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் 10 ஓவர்களை முடிக்க முடியாவிட்டால், புள்ளிகள் பட்டியலில் அதிக இடத்தைப் பிடித்த அணி டி-20 உலக கோப்பை போட்டியின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
இறுதிப் போட்டிக்கான ரிசர்வ் நாளிலும் அணிகள் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் 10 ஓவர்களை முடிக்க முடியாவிட்டால், டி-20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் களமாடும் இரு அணிகளும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.
கிரிக்கெட் வரலாற்றில் அப்படியொரு நிகழ்வு நடந்துள்ளதா?
ஆம், கடந்த 2002 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி மேட்ச் மற்றும் ரிசர்வ் நாள் ஆகிய இரண்டு நாட்களிலும் கைவிடப்பட்டது. இதனால், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு அணிகளும் ஐசிசியால் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
செப்டம்பர் 29, 2002 அன்று நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில், இலங்கை - இந்திய அணிகள் மோதிய நிலையில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 244 ரன்கள் எடுத்தது. மழையால் ஆட்டம் நிறுத்தப்படுவதற்கு முன்பு இந்திய அணி இரண்டு ஓவர்கள் மட்டுமே விளையாடி இருந்தது. பின்னர், தொடர்ந்து பெய்த மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இறுதியில் இந்தியாவும் இலங்கையும் இணை சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.