/indian-express-tamil/media/media_files/2025/10/11/coimn-2025-10-11-21-00-54.jpg)
எஃப்.எம்.ஏ.இ (FMAE) - தேசிய மாணவர் மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டியை தெலுங்கானா முன்னாள் அமைச்சர் கே.டி.ராமாராவ் துவக்கி வைத்து கார்ட் ரக கார்களின் செயல்திறன்,உற்பத்தி முறைகள் பார்வையிட்டு மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
இந்தியாவில் வளர்ச்சியடைந்து வரும் மோட்டார் பந்தயங்களின் காரணமாக டெஸ்லா, பைட் போன்ற நிறுவனங்களுக்கு இணையான மின்னணு கார் உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவிலும் துவங்கப்பட வாய்ப்பு உருவாகி உள்ளதாக தெலங்கானா மாநில முன்னாள் அமைச்சரும், பி.ஆர்.எஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான கே.டி.ராமாராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த Fraternity of Mechanical and Automotive Engineers எனும் அமைப்பும், கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களும் இணைந்து கோவையில் தேசிய மாணவர் மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டியின் 10வது பதிப்பை நடத்துகின்றன. இந்த போட்டியின் முதற்கட்டமாக இதில் பங்கேற்கும் 13 மாநிலங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், தாங்கள் உருவாக்கியுள்ள கார்களுடன் பங்கேற்பதற்காக கோவை வருகை தந்துள்ளனர்.
முதல்கட்டமாக இந்த மாணவர்களின் படைப்புகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, இதில் தேர்வு செய்யப்படும் அணிகளின் கார்கள், வரும் திங்கட்கிழமை முதல் 3 நாட்கள் நடைபெறும் கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஆய்வு பணிகள் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குமரகுரு கல்விக்குழுமங்களின் தலைவர் சங்கர் வானவராயர் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக தெலங்கானா மாநில முன்னாள் அமைச்சரும், பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவருமான கே.டி.ராமாராவ் கலந்து கொண்டு போட்டிகளை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.டி.ராமாராவ் கூறுகையில், தெலங்கானாவில் கடந்த 2023ம் ஆண்டு பார்முலா எப் பந்தயம் நடத்தப்பட்டதின் மூலம், பல்வேறு புதிய முதலீடுகள் ஈர்ப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இப்போட்டிகளின் தாக்கம் காரணமாக தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் மோட்டார் பந்தயங்களுக்கான ஆர்வம் அதிகரித்து இருப்பதோடு, புதிய ஸ்டார்ட்டப் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவின் டெஸ்லா, சீனாவின் பைட் (BYD) போன்ற மின்சார கார் தயாரிப்பு நிறுவனங்களைப் போல, இந்தியாவிலும், குறிப்பாக தமிழ்நாடு, தெலங்கானா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் மட்டுமின்றி, இந்தியாவின் பெரும்பான்மை மாநிலங்களிலும் மின்சார கார் உற்பத்திக்கான ஸ்டார்ட்டப் நிறுவனங்கள் உருவாக வாய்ப்பு உருவாகியுள்ளது.
வளர்ந்து வரும் மோட்டார் பந்தயங்களுக்கான வரவேற்பு, மின்சார கார் உற்பத்தி மற்றும் அது சார்ந்த புத்தொழில்களையும் ஊக்குவிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார். பின்னர் மாணவர்கள் தயாரித்துள்ள கார்ட் ரக கார்களை பார்வையிட்ட அவர், அவற்றின் செயல்திறன், உற்பத்தி முறைகள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.